அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு.. ‘ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால்’.. வார்னிங்!
சென்னை : தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் பயணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், கடந்த ஆண்டுகளை விட முன்பதிவு செய்து பயணிப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஆய்வு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான மக்கள் சொந்த ஊருக்கு செல்வதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெளியூர்களுக்குச் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

சிறப்பு பேருந்துகள்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், "வழக்கமாக இயங்குகின்ற 2,100 பேருந்துகளை தவிர்த்து நாளை 1,586 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 1,195 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது. எனவே ஒட்டுமொத்தமாக சென்னையிலிருந்து 10,518 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. கடந்த ஆண்டுகளை விட முன்பதிவு செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டை விட
கடந்த ஆண்டு தீபாவளியின்போது முன்பதிவு செய்து பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 87 ஆயிரம். இந்த வருடம் இதுவரை ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை இன்னும் கூடும் என்ற அடிப்படையில் கூடுதலான சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி இன்னும் தேவை என்றால் வழக்கமான எண்ணிக்கையை தாண்டி தேவையான பேருந்து வசதிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

நெரிசல் குறைவு
அதேபோல் சென்னை மாநகரத்திற்குள்ளாக பல்வேறு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக 150 பேருந்துகள் அந்த பகுதிகளில் மட்டும் இயக்கப்படுகிறது. இன்று காலை முதல் பயணிகள் அதிகமானோர் தங்கள் பயணத்தை தொடங்கி உள்ளதால் பெரிய அளவில் நெரிசலின்றி செல்வதைப் பார்க்க முடிகிறது. இரவு வரை நெரிசல் இல்லாமல் இதேபோல் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிக கட்டணம் வசூலித்தால்
தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெரிய அளவில் புகார்கள் இல்லை. இருந்தாலும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். போக்குவரத்துதுறை ஆணையர் மற்றும் அலுவலர்களும் அதுபற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு குழுக்கள் அதிக கட்டணம் வசூலிப்பது பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications