அப்படியே விமான போக்குவரத்து துறை அமைச்சர்னு நெனப்பு.. காயத்ரியை ஒருமையில் விமர்சித்த திருச்சி சூர்யா
சென்னை: கதவுன்னாலே உங்களுக்கு ஏம்மா பிரச்சினையா இருக்குது என காயத்ரி ரகுராமை திருச்சி சூர்யா சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தவர் காயத்ரி ரகுராம். இவர் தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். இந்த நிலையில் இவர் டெய்சி சரண்- திருச்சி சூர்யா விவகாரத்தில் கருத்து சொன்னதால் இவர் கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அண்ணாமலையின் வார்ரூமிலிருந்து காயத்ரி மீது மோசமான கருத்துகளை முன் வைப்பதாக தினந்தோறும் டிவிட்டரில் புகார் கூறி வந்தார். இந்த நிலையில் அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சியிலிருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுவதாகவும் அறிவித்திருந்தார்.
அடியாளை அனுப்புகிறார்.. பெரிய ஆபத்து.. என்னது அண்ணாமலையா? புயலை கிளப்பிய காயத்ரி ரகுராம்!
காயத்ரி ரகுராம்
இதையடுத்து காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்தார். இதை கண்டித்து ஜனவரி 27ஆம் தேதி நடைப்பயணம் மேற்கொள்ள போவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். மேலும் பாஜகவில் அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற கருத்தையும் முன் வைத்துள்ளார்.
இண்டிகோ விமானம்
இந்த நிலையில் இண்டிகோ விமானத்தின் கதவு திறக்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சென்னையிலிருந்து இண்டிகோ 6இ- 7339 விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தின் அவசரவழிக் கதவை பயணி ஒருவர் திறந்ததாக செய்திகள் வெளியாகின.
விமானம் நிறுத்தம்
இதனால் விமானம் நிறுத்தப்பட்டது. பின்னர் விமானத்தின் கதவு திறக்கப்பட்டதால் அவசர கால கதவு மற்றும் விமானத்தின் காற்றழுத்தம் சரிபார்க்கப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தின் கதவை திறந்தவர் கர்நாடகா பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா என தகவல்கள் வெளியாகின.
விமான பாதுகாப்பு நெறிமுறைகள்
இந்த நிலையில் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில் விமானம் கிளம்பி ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த போது விமான பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து விமானக் குழுவினர் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அபபோது அவசரகால கதவை தேஜஸ்வி சூர்யா திறந்தார். இதனால் பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். தொடர்ந்து தேஜஸ்வி மன்னிப்பு கேட்ட பிறகுதான் அவர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆயினும் அவசர வழி கதவு அருகே இருந்த அவருடைய இருக்கை மாற்றப்பட்டது என அந்த பயணி செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
அவசர வழி கதவு
அவசர வழி கதவு திறக்கப்பட்டது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சிலர் இது போன்ற செயல் அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் செயல் என விமர்சிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில் அவசர வழி கதவு திறக்கப்பட்ட விவகாரத்தில் தவறுதலாக கதவு திறக்கப்பட்டதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டு விட்டார் என சிந்தியா விளக்கமளித்துள்ளார்.
காயத்ரி ரகுராம் ட்விட்டர்
இந்த நிலையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் மன அழுத்தம் உள்ளவர்கள், பயங்கரவாதிகள்தான் பயணிகளின் உயிரை பணயம் வைத்து ஓடும் விமானத்தின் கதவை திறப்பார்கள் என கூறி விமர்சனம் செய்திருந்தார். இவரது இந்த ட்வீட்டிற்கு திருச்சி சூர்யா சிவா பதில் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில் கதவுன்னாலே உங்களுக்கு ஏம்மா பிரச்சினையா இருக்குது. கண்ணாடி கதவு போட்டாலும் பிரச்சினை கதவை திறந்தாலும் பிரச்சினை. ஏதோ நீங்கள் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் என நினைப்பு என்று சூர்யா சிவா விமர்சித்துள்ளார். "குஷ்பு அல்லது காயத்ரி தன்னை வந்து சந்திக்கக் கூடும் என்பதால்தான் எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதால் கண்ணாடி கதவை அமைத்தேன்" என அண்ணாமலை ஒரு ஆடியோவில் கூறியிருந்ததை காயத்ரி ரகுராம் தனது பேட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இதைத்தான் கண்ணாடி கதவுன்னாலே பிரச்சினை என திருச்சி சூர்யா விமர்சித்துள்ளார்.