டெய்சி சரணுடனான ஆடியோ! சைதை சாதிக்கைவிட திருச்சி சூர்யா சிவாவின் பேச்சு ரொம்ப மோசம்.. காயத்ரி
சென்னை: திமுக நிர்வாகி சைதை சாதிக்கை விட திருச்சி சூர்யா சிவா மோசமாக பேசியுள்ளார் என பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவில் நேற்று ஒரே நாளில் இரு அதிரடியான அதிர்ச்சியான விஷயங்கள் நடந்தன. அதில் ஒன்று திருச்சி சூர்யா சிவா மீதான நடவடிக்கை. அதாவது பாஜக சிறுபான்மை அணியை சேர்ந்த தலைவர் டெய்சி சரணுடன் அவர் பேசிய உரையாடல் ஆடியோ வெளியானது.
அதில் டெய்சி சரணின் கேரக்டரையே டேமேஜ் செய்யும் அளவுக்கு மிகவும் மோசமான வார்த்தைகளால் திருச்சி சூர்யா சிவா பேசியிருந்ததாக வெளியான ஆடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
திருச்சி சூர்யா சர்ச்சை: ட்விட்டரில் திமுக ராஜீவ் காந்தி - பாஜக அமர் பிரசாத் ரெட்டி உக்கிர மோதல்!
டெய்சி சரண்
டெய்சியை பேசவே விடாமல் அந்த ஆடியோவில் திருச்சி சூர்யா சிவா பேசியதாக சொல்லப்படும் நபர் மிகவும் அத்துமீறி பேசியுள்ளார். இது பாஜக மகளிரணியினருக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கோபத்தை முதலில் கொப்பளித்தவர் காயத்ரி ரகுராம். தனது ட்விட்டரில் காயத்ரி கூறியிருப்பதாவது: பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்?
கட்சியை குறை சொல்ல வேண்டாம்
கட்சியை குறை சொல்ல வேண்டாம் என அனைவரையும் தாழ்மையான வேண்டுகோள். திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மை சேதப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன்.. இந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை. என் ஆறுதல் மற்றும் ஆதரவு என குறிப்பிட்டிருந்தார்.
திருச்சி சூர்யா சிவா
இவ்வாறு திருச்சி சூர்யா சிவா மீது மற்ற மூத்த தலைவர்களோ, பெண் நிர்வாகிகளோ கண்டனம் தெரிவிப்பதற்கு முன்பு கண்டித்த காயத்ரியை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காயத்ரி ரகுராம்
இதுகுறித்து காயத்ரி ரகுராம் அவருடைய வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் என்னுடைய செயல்பாடுகள் அனைத்துமே தவறாகவே சித்தரிக்கப்பட்டு மேலிடத்தில் போய் சேருகிறது. இதுவரை எந்த ஒரு விளக்கமும் என்னிடம் கேட்கப்படவில்லை. எந்த நோட்டீஸும் அளிக்கப்படவில்லை.
வளர்ச்சியை தடுக்கிறார்கள்
என் வளர்ச்சியை சில வேண்டுமென்றே தடுக்கிறார்கள். நான் முட்டி மோதித்தான் மேலே வர வேண்டும். ஆபாச ஆடியோ தொடர்பான புகாரில் சிக்கியுள்ள திருச்சி சூர்யா சிவாவை கண்டித்ததற்காகத்தான் நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டேனா என்பது எனக்கு தெரியாது. அரசியலைத் தாண்டி ஒரு பெண்ணை எத்தனை தகாத வார்த்தைகளால் திருச்சி சூர்யா சிவா பேசியுள்ளார். திமுக நிர்வாகி சைதை சாதிக்கைவிட மோசமாக பேசியுள்ளார்.
என்ன வார்த்தை
இப்படிப்பட்ட வார்த்தைகளால் ஒரு பெண்ணை பேசும் போதும் எப்படி நான் கொந்தளிக்காமல் இருக்க முடியும். இது என் உரிமையில்லையா. ஒரு பெண்ணுக்கு துணை நிற்கவில்லை என்றால் நான் எப்படி ஒரு பெண்ணாக இருக்க முடியும். இதற்காகத்தான் என்னை அண்ணாமலை கட்சியிலிருந்து நீக்கினாரா என தெரியவில்லை. ஆனால் அவர் கட்சியின் தலைவர் அவரது முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். எனினும் இந்த முடிவு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.
பாஜகவில் தொடர்வேன்
என்னை யாராவது கடுமையாக தாக்கி பேசினால் நானும் பதிலுக்கு பேசுவேன். இதனால் நான் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டேன் என கூறுவது சரியல்ல. பதவி இல்லாவிட்டால் என்ன நான் பாஜக தொண்டனாக கட்சிக்காக உழைப்பேன். கடைசி வரை பாஜகவில் தொடர்வேன். என் மீது தவறில்லை என்பதை புரிய வைப்பேன் என காயத்ரி ரகுராம் பேசினார்.
திமுக சைதை சாதிக்கை விட மோசம்
திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் அண்மையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜை வைத்துக் கொண்டு பாஜகவில் உள்ள நடிகைகள் குஷ்பு, காயத்ரி ரகுராம், நமீதா, கவுதமி ஆகிய 4 பேரையும் மிகவும் அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார். இவரது இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் சொந்த கட்சியை சேர்ந்த திருச்சி சூர்யா சிவாவே சக நிர்வாகியான டெய்சி சரணை கடுமையாக ஆபாசம் கொப்பளிக்க பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.