ஜூன் 13-தினகரன் வீட்டு திருமணம் ஒத்திவைப்பு- சசிகலா- ஓபிஎஸ் சந்திப்பு இல்லை- ஈபிஎஸ் கோஷ்டி ஹேப்பி!
சென்னை: தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட ஜூன் 13-ல் நடைபெற இருந்த டி.டி.வி. தினகரன் வீட்டு திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் மூலம் தங்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என நினைத்த ஓபிஎஸ் திட்டம் நிறைவேறாமல் போனதால் எடப்பாடி பழனிசாமி அணி மகிழ்ச்சியடைந்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை மட்டும் வைத்துக் கொண்டு கட்சியை எப்படியாவது தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியாதா என போராடிப் பார்க்கிறார் ஓபிஎஸ். ஆனால் இப்போதைய நிலையில் ஓபிஎஸ்-க்கு ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு கூட இல்லை என்பதுதான் யதார்த்தமாக உள்ளது. அதேநேரத்தில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கின்றனர்.
இது என்ன கொங்கு கட்சியா?.. உறுத்திய 4 விஷயம்.. கம்பேக்கிற்கு கட்டம் கட்டிய சசிகலா.. நடந்தது என்ன?
சசிகலா அணியில் ஓபிஎஸ்
இதனால் தமது இருப்பை உறுதி செய்வதற்காக சசிகலா தரப்புடன் கை கோர்ப்பது என்பதில் தீவிரமாக உள்ளார் ஓபிஎஸ். இதற்கு அச்சாரமாகத்தான் ஜூன் 13-ந் தேதி டி.டி.வி. தினகரன் மகளின் திருமண நிகழ்வை பயன்படுத்தவும் ஓபிஎஸ் அணி நினைத்திருந்தது. அதேபோல் சசிகலா தரப்பும் அரசியலுக்கு ரீ என்ட்ரியாக இந்த திருமண நிகழ்ச்சியை பயன்படுத்தலாம் என கணக்குப் போட்டிருந்தது.
ஜூன் 13ல் திருமணம்
அதிமுகவில் ஓபிஎஸ் அணிக்கு மட்டும் திருமண அழைப்பிதழை கொடுத்து அழைப்பதன் மூலம் கட்சியில் கலகம் வரும் என்பதுதான் சசிகலா குடும்பத்தின் கணக்காக இருந்தது. அதேபோல் ஜூன் 23-ந் தேதி திருமண வரவேற்பும் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதனால் ஜூன் 13, 23 ஆகிய இரு நிகழ்ச்சிகளும் அதிமுகவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டன.
சசிகலா ஆடியோ ரிலீஸ்
இதனால்தான் சசிகலா தரப்பில் அடுத்தடுத்து அதிமுக தொண்டர்களுடன் பேசுகிற ஆடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 6 ஆடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த 6 ஆடியோக்களிலுமே அதிமுக தலைமையை ஏற்று வழிநடத்த தாம் தயார் என்பதை சசிகலா தெளிவாகவே சொல்லி இருக்கிறார். இது எடப்பாடி பழனிசாமி கோஷ்டிக்கு உதறலாகத்தான் இருந்து வந்தது.
திருமணம் ஒத்திவைப்பு
இந்நிலையில்தான் ஜூன் 13-ந் தேதி நடைபெற இருந்த தினகரன் வீட்டு திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் மணமகனின் தாத்தா துளசி அய்யா வாண்டையார் மறைந்ததை காரணமாக காட்டி இந்த திருமணம் ஒத்திவைக்கப்படுகிறதாம். அத்துடன் தற்போது கொரோனா பரவல் காலம் என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதும் சிரமமாக இருக்கும் என கருதுகின்றனராம். இந்த 2 காரணங்களால்தான் திருமணத்தை ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பரில் நடத்தலாம் என முடிவு செய்துள்ளனராம். இதனால் திருமணத்தின் போது சசிகலாவை சந்தித்து கலகம் ஏற்படுத்தலாம் என்கிற ஓபிஎஸ்-ன் திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது. தினகரன் வீட்டு திருமணத்தை முன்வைத்து ஆட்டத்தை ஆடலாம் என நினைத்த சசிகலா கோஷ்டியின் வியூகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பது ஈபிஎஸ் அணியை ரொம்பவே குஷிப்படுத்திவிட்டதாம்.