தூங்கும் புலியை சீண்டி பார்க்காதீங்க.. எடப்பாடியை விமர்சிக்கும் டிடிவி தினகரனுக்கு மாஜி எச்சரிக்கை!
சென்னை : அதிமுகவிலிருந்து வெளியே சென்று தனிக் கட்சி தொடங்கிய டிடிவி தினகரனுக்கு அதிமுகவை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்.
திமுகவை எதிர்ப்பதற்காக அதிமுக கூட்டணியில் இணைய தயார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறிய நிலையில், அமமுகவை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள 1% கூட வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சால் டிடிவி தினகரன் கடுமையாக அப்செட் ஆகி, எடப்பாடி பழனிசாமியை தாக்கிப் பேசி வருகிறார்.
அதிமுக தற்போது தலையில்லா முண்டமாக உள்ளது. அதிமுக செயல்படாத கட்சி. இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஈபிஎஸ்ஸை விமர்சித்துப் பேசியுள்ளார்.

ஈபிஎஸ் vs டிடிவி
எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன், கடந்த சில மாதங்களாக மென்மையான போக்கையே கையாண்டு வந்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இணையும் விருப்பத்துடனே தினகரன் செயல்பட்டு வந்தார். திமுகவை வீழ்த்துவதற்காக எந்தக் கூட்டணியிலும் இணையத் தயார் என்றும் பேசி வந்தார் தினகரன். இந்நிலையில் தான், தினகரனை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள 1 சதவிகிதம் கூட வாய்ப்பில்லை என சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். இது தினகரன் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காலையும், கழுத்தையும்
தான் சீண்டப்பட்டதால், எடப்பாடிக்கு மீண்டும் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் தினகரன். அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற சுயநல நோக்கத்தோடு எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அதிமுக தற்போது தலையில்லா முண்டமாக உள்ளது. அதிமுக செயல்படாத கட்சி. இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் ஒன்றும் செய்ய முடியாது. அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது. பதவிக்காக எடப்பாடி பழனிசாமி போல் நான் காலையும் பிடிக்கமாட்டேன். கழுத்தையும் பிடிக்கமாட்டேன் என கடுமையாகச் சாடி வருகிறார்.

மோதல்
அமமுகவை கூட்டணியில் சேர்ப்பது பாஜகவின் திட்டம் எனக் கூறப்பட்டு வருகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே, பாஜக பற்றியும் இணக்கமாகப் பேசி வந்தார் தினகரன். இந்நிலையில் தான் எடப்பாடி பேச்சால் ஈபிஎஸ் அணி vs டிடிவி தினகரன் என்ற மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜகவை எதிர்க்கும் வகையிலேயே ஈபிஎஸ் இவ்வாறு பேசியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த டிடிவி தினகரனுக்கு ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான மாஃபா.பாண்டியராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

தூங்கும் புலியை சீண்டும் டிடிவி
சென்னை திருவொற்றியூரில் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாஃபா பாண்டியராஜன், "தேவையில்லாத நேரத்தில் தூங்கும் புலியை டிடிவி தினகரன் சீண்டி வருகிறார். அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் எழுச்சியுடன் வீறு கொண்டு எழுந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இது டிடிவி தினகரனுக்கு நன்றாகத் தெரிந்தும் சில காரணங்களினால் அதிமுக பிரிந்து கிடப்பது போன்று கருத்தை தெரிவித்து வருகிறார்.

உரிமை இல்லை
99% அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி வளர்த்த கட்சி அதிமுக, முழுமையாக எடப்பாடி பழனிசாமி பின்னால் நிற்கிறது. ஈபிஎஸ் தனியாக கட்சி தொடங்க வாய்ப்பு கிடையாது. அதிமுகவிலிருந்து வெளியே சென்று தனிக்கட்சி நடத்தும் டிடிவி தினகரனுக்கு அதிமுகவைப் பற்றி பேச உரிமை இல்லை" எனச் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications