மாரியப்பன் தங்கவேலுவிற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.. டிடிவி தினகரன் வாழ்த்து
சென்னை: பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவிற்கு மத்திய அரசின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கும், தடகள வீரர் ரஞ்சித் குமாருக்கு தயான் சந்த் விருது வழங்கப்படுவதற்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. இதற்கு அடுத்தபடியாக அர்ஜுனா விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, ரோஹித் ஷர்மா, மனிகா பத்ரா, வினேஷ் போகத், ராணி ராம்பால் ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் ரஞ்சித் குமார், தயான்சந்த் விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றவர் மாரியப்பன் தங்கவேலு ஆகும்.
இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு மத்திய அரசின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்றொரு தடகள வீரரான ரஞ்சித் குமாருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்படவிருக்கிறது.
தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்திடும் இவர்கள் இருவர் உட்பட விருது பெறும் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications