உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகினால் மட்டும் தமிழக நிலை மாறவா செய்யும்.. டிடிவி தினகரன் அங்கலாய்ப்பு
சென்னை: உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் ஒரு மாற்றமும் வராது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது: அமைச்சர் மா சுப்பிரமணியம் மாசில்லாமல் பேச வேண்டும். ஏழை எளிய மக்கள், முதியவர்கள், தொழிலாளர்கள் இவர்கள் எல்லாம் அம்மா உணவகத்தால் எவ்வளவு பயனடைந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
தமிழக அரசியலில் விரைவில் மாற்றம்.. எப்படி தெரியுமா? இந்து முன்னணி காடேஸ்வரா சுப்பிரமணியம் பகீர்
நல்ல தரமான உணவு
அரசாங்கமே நல்ல தரமான உணவை குறைந்த விலையில் விலைவாசி உயரும் நேரத்திலும் அம்மா உணவகங்கள் மூலம் கொடுத்திருந்ததை பல பொருளாதார ஆய்வாளர்களே பாராட்டியிருந்தார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை மூடு விழா நடத்த வேண்டும் அல்லது முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான கருணாநிதியின் பெயரில் மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.
அட்சய பாத்திரம்
ஆதரவற்றோர்களுக்கு அட்சய பாத்திரமாக ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை முடக்கினால் மக்கள் அவர்களை மன்னிக்கவே மாட்டார்கள். திராவிட மாடல் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து இன்று முதல்வர் மாட்டிக் கொண்டு விழிக்கிறார். இந்திய இறையாண்மைக்கு எதிராக இந்த ஆட்சி செயல்படுகிறது.
வளர்ச்சி
இந்த ஆட்சியாளர்கள் தங்களின் வளர்ச்சிக்காகவே பாடுபடுகிறார்கள். மக்களை கண்டு கொள்வதில்லை. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சரி செய்துவிடுவாரா இல்லை போதை பொருட்களைதான் ஒழித்து விடுவாரா. இரண்டுமே கிடையாது. வேண்டுமானால் இன்னும் இரண்டு திரைப்படங்கள் அதிகமாக நடிப்பார் அவ்வளவுதான்.
சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல் துறையை சுயமாக இயங்கவிட வேண்டும். தமிழகத்தில் போதை பொருட்கள் தலைவிரித்தாடுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். எப்போதுமே அமமுக எனும் இயக்கம் சுயமாக சிந்தித்து செயல்படும் இயக்கமாகும். இது எப்போது நயவஞ்சகர்களின் கூட்டமான எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படாது.
ஓபிஎஸ் உணர்ந்துவிட்டார்
எடப்பாடியுடன் இணைந்ததே தவறு என்பதை ஓபிஎஸ் உணர்ந்துவிட்டார். அதிமுக வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும் அதிமுகவும் , இரட்டை இலை சின்னம் தவறானவர்கள் கையில் இருப்பதை மக்கள் உணர்வார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை சின்னம் போனால் அந்த சின்னத்திற்கான மதிப்பையும் மரியாதையையும் இழந்துவிடும் என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என திமுக மூத்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உதயநிதியோ தனக்கு அமைச்சர் பதவி கேட்டு யாரும் தலைவரை (முதல்வர்) தொந்தரவு செய்ய வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளார். எனினும் மூத்த அமைச்சர்கள், உதயநிதி எம்எல்ஏவாக இருப்பதால் சேப்பாக்கம் தொகுதி நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. சேப்பாக்கம் மட்டும் வளர்ச்சி அடைந்துவிட்டால் போதாது, அமைச்சர் பதவி கொடுத்தால் மற்ற தொகுதிகளுமே வளர்ச்சி அடையும் என வலியுறுத்தி வருகிறார்கள்.