காம்ப்ரமைஸ்.. அமித் ஷா சொன்னது என்ன?.. திடீரென சசி பக்கம் சாயும் ஓ.பி.எஸ்.. பின்னணியை உடைத்த டிடிவி!
சென்னை: சசிகலாவிற்கு ஆதரவாக திடீரென துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதுதான் தற்போது அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. ஓ.பி.எஸ் ஏன் திடீர் என்று இப்படி பேசினார்? பின்னணியில் என்ன நடந்தது?
சசிகலா மீது எனக்கு வருத்தம், கோபம் எல்லாம் இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சில சந்தேகங்கள் பொதுவெளியில் சசி மீது இருந்தன. சசிகலாவிற்கு அவப்பெயர் ஏற்படும் நிலை ஏற்பட்டது . அந்த அவப்பெயரை போக்க வேண்டும் என்றே தர்ம யுத்தம் நடத்தினேன் என்று தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் ஓ.பி.எஸ் குறிப்பிட்டு இருந்தார்.
சசிகலா பெருந்தன்மையாக செயல்படுகிறார்.. அவர் மீது எனக்கு கோபமோ, சந்தேகமோ இல்லை என்று ஓ.பி.எஸ் சசிகலாவை புகழ்ந்து பேசி உள்ளார்.
சந்தேகம்
சசிகலாவை திடீரென ஓ.பி.எஸ் புகழ என்ன காரணம் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. சசிகலா சிறையில் இருந்து வந்த பின் அவருக்கும் - அதிமுகவிற்கும் இடையில் சமரச பேச்சுக்கள் நடப்பதாக செய்திகள் வந்தது. அமித் ஷா மூலமும் மற்ற பாஜக தலைவர்கள் மூலமும் சசிகலா - அதிமுக இடையே சமரச பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் இவர்கள் இணைந்துவிடுவார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது.
தேர்தல்
அப்படி பேச்சுக்கள் எழுந்த போதுதான் சசிகலா அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்தார். அதிமுக பக்கமும் போகாமல், அமமுக பக்கமும் போகாமல் ஒதுங்கி இருக்க சசிகலா முடிவு செய்தார். ஆனால் சசிகலாவின் இந்த முடிவு கூட ஒரு சமரச தூதாகவே பார்க்கப்பட்டது... தேர்தல் வரை உங்களை தொல்லை செய்ய மாட்டேன். உங்கள் வெற்றியை தடுக்க மாட்டேன் என்று சசிகலா சமாதானம் செய்தது போலவே பார்க்கப்பட்டது.
ஓ.பி.எஸ்
இப்படி சசிகலா அதிமுகவின் வெற்றிக்கு வழிவிட்ட நிலையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் இறங்கி வந்துள்ளார். சசிகலாவின் பெருந்தன்மையை பாராட்டி, சசிக்கு ஆதரவாக அவரை பாராட்டி ஓ.பி.எஸ் பேசியுள்ளார். ஒருவேளை அதிமுக தரப்பு சசிகலாவின் சமாதானத்தை ஏற்றுக்கொண்டதோ என்று ஓ.பி.எஸ் பேட்டி சந்தேகத்தை எழுப்பி உள்ளது. அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்ததை பார்த்து மனமிறங்கி ஓ.பி.எஸ் இப்படி பேசி உள்ளாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
அமித் ஷா
இதற்கு பின் அமித் ஷா இருக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது. அமித் ஷாவின் சமாதான பேச்சு வெற்றிபெற்றுவிட்டது. இவர்களின் இணைப்புக்கு வாய்ப்பு உருவாகிவிட்டது. அதனால்தான் தற்போது ஓ.பி.எஸ் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் பிரச்சனை முடிந்துவிட்டது அதிமுக vs சசிகலா கதையில் சுபம் என்று எண்டு கார்ட் போட்டு முடிக்கலாம் என்று பார்த்தால்.. டிடிவி தினகரன் இதற்கு அப்படியே எதிராக பேசி உள்ளார்.
அமித் ஷா
சமரச பேச்சு எதுவும் நடக்கவே இல்லை என்று தினகரன் கூறியுள்ளார். தினகரன் நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் சசிகலாதான் அதிமுகவை, ஆட்சியை வழி நடத்துவதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. தற்போது நடப்பது அம்மாவின் ஆட்சி கிடையாது. உண்மையான அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் ஆசை. தற்போது நடப்பது உண்மையான அம்மாவின் ஆட்சி கிடையாது.
துரோகிகள்
அதிமுகவில் இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் துரோக சக்திகள். அதிமுக தலைமையை சமாதானம் செய்ய நாங்கள் எதுவும் சமரசம் பேசவில்லை . அமித் ஷா தூது பேசினார், அமித் ஷா நேரடியாக எங்களிடம் பேசினார் என்றெல்லாம் நிறைய பேர் சொன்னார்கள். ஆனால் அமித் ஷா எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. காம்ப்ரமைஸ் குறித்து அவர் எங்களிடம் எதுவும் பேசவில்லை.
மீட்க வேண்டும்
எந்த சமரசமும் நடக்கவில்லை. அமமுக தோன்றியதே அதிமுகவை மீட்க வேண்டும் என்பதால்தான். அதிமுக தோல்வி அடைந்த பின் மொத்தமாக அக்கட்சி எங்களிடம் வந்துவிடும். அமமுக - அதிமுகவை இணைத்துவிடுவோம். அதிமுகவின் பொதுச்செயலாளராக கண்டிப்பாக சசிகலா வருவார். அவர் இப்போது ஒதுங்கி இருக்கிறார் .. அவ்வளவுதான்.
ரெஸ்ட்
சசிகலா எடுப்பது ரெஸ்ட். சசிகலா யாரிடமும் போய் என்னை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறவில்லை. இப்போது தலைப்புச்செய்தி ஆவதை சசிகலா விரும்பவில்லை. தேர்தலுக்கு பின் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார்.. இப்போது சமரசம் எதுவும் நடக்கவில்லை என்று தினகரன் குறிப்பிட்டுள்ளார்.ஒரு பக்கம் சசிகலா பக்கம் சாய்வது போல ஓ.பி.எஸ் பேசுகிறார்.. இன்னொரு பக்கம் தினகரனோ அப்படியே ஓ.பிஎஸ் - இ .பி.எஸ் ஜோடிக்கு எதிராக பேசி உள்ளார்.
வாய்ப்பு
அதோடு சமரச பேச்சே நடக்கவில்லை.. அவர்கள் எல்லாம் துரோகிகள் என்றும் கூறுகிறார். சசிகலா - அதிமுக இடையே சமரசம் உருவாவதற்கான சின்ன அறிகுறியை கூட தினகரனின் இந்த பேட்டி உடைத்துள்ளது. இதனால் சசிகலா அதிமுக இணைப்பு சாத்தியம் ஆகுமா.. இல்லை தேர்தலுக்கு பின்பும் இந்த மோதல் தொடருமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.