"நீங்க வேணும்னா பாருங்க.. சின்னம்மாவை வரவேற்க 'அவர்' வருவார்".. அப்படியா அது நடக்குமா!?
சென்னை: "நீங்க வேணும்னா பார்த்துட்டே இருங்க.. சின்னம்மாவை வரவேற்க அவரே நேரடியாக வர போகிறார்" என்று டிடிவி தினகரன் தன்னுடைய ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் குறித்து சொன்னாராம்.. இது எடப்பாடி தரப்பை மேலும் அதிர வைத்து வருகிறது!
சசிகலா விடுதலை விவகாரம் மிகப்பெரிய தாக்கத்தையும், அதிர்வையும் தமிழக அரசியலில் ஏற்படுத்தி வருகிறது.. அதனால், சசிகலா வருகையால் முக்கியத்துவமும், அங்கீகாரமும் குறைந்துவிட கூடும் என்பதால் எடப்பாடியார் தரப்பு மிகுந்த கவலைக்கும், கலக்கத்துக்கும் ஆளாகி வருகிறது.
அதனாலேயே, யாரும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அப்படி யாராவது ஆதரவு தருகிறார்களா என்பதை கண்காணிக்கும்படி உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி இருந்தும் ஆங்காங்கே சசிகலாவுக்கான ஆதரவுகள் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
2 அமைச்சர்கள்
இதில் 2 விஷயங்கள் கவனிக்கத்தக்கதாக உள்ளது.. சசிகலா டிஸ்சார்ஜ் ஆகி காரில் செல்லும்போது, அதிமுக கொடியை பறக்க விட்டு சென்றுள்ளார்.. இதை பற்றி அன்றைய மதியமே 2 அமைச்சர்கள் கொந்தளித்த நிலையில், அன்று இரவே கேபி முனுசாமி வேறு வகையாக பேட்டி தந்துள்ளார்.. மன்னிப்பு கடிதம் தந்தால், டிடிவி தினகரனை கட்சியில் சேர்ப்பது பற்றி பரிசீலிப்போம் என்றார். ஒரே நாளில் அதிமுகவின் இந்த முரண் பெருத்த சந்தேகத்தை பரவலாக ஏற்படுத்தி உள்ளது.
விளம்பரம்
ஆனால், ஓபிஎஸ் வாயே திறக்காமல் இருக்கிறார்.. சசிகலா விடுதலை ஆன அன்று ஒரு விளம்பரம் தந்திருக்கிறார்.. எதற்காக இந்த விளம்பரம், குறிப்பாக அன்றைய நாளில் தரப்பட்டது என்பது யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. டெல்லியில் முதல்வர் பேட்டி தரும்போது, சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று சொன்ன நிலையில், அதை பற்றியும் இன்றுவரை ஓபிஎஸ் பேசாமல் இருப்பதும் யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
நிர்வாகிகள்
அடுத்ததாக, சசிகலாவை வரவேற்ற நிர்வாகியை கட்சியை விட்டே தூக்கியபோது, அதில் கையெழுத்து போட்டவர், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்தான்.. ஆனால், அவரது மகனே சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்ட நிலையில், அதையும் கண்டுகொள்ளமல் இருப்பதையும் இங்கு யோசிக்க வேண்டி உள்ளது.
வரவேற்பு
இதுபோன்ற சூழலில்தான், தினகரன் தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசும்போது, "அதிமுகவில் சின்னம்மாவை வெளிப்படையாகவே வரவேற்பார்கள்... நீங்க வேணும்னா பாருங்க, பன்னீர்செல்வமே சென்னையின் எல்லையில் நின்று சின்னம்மாவை வரவேற்பார்" என்றாராம்.. தினகரன் உண்மையிலேயே இப்படி சொன்னாரா என்பது உறுதியாக தெரியவில்லை..
செல்வாக்கு
ஒருவேளை அப்படியே சொல்லி இருந்தாலும், பன்னீரின் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன என்றும், இனரீதியான ஒற்றுமை, தென்மண்டல செல்வாக்கு, போன்றவைகளும் மீண்டும் இவர்களின் இணக்கத்திற்கு அடித்தளமாக இருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.