தவெகவும், விசிகவும் எதிரெதிர் துருவமில்லை.. திருமா மீட்டிங்கிற்கு பின் ஆதவ் அர்ஜுனா சொன்ன வார்த்தை
சென்னை: தவெகவும், சிகவும் கொள்கை ரீதியாக எதிரெதிர் துருவங்கள் இல்லை. கொள்கை ரீதியாக ஒரே துருவங்களாக ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்று திருமாவளவனை சந்தித்த பிறகு ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது திமுகவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
விசிகவில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா இன்று நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். சென்னை பனையூரில் உள்ள தவெகவின் கட்சி அலுவலகத்தில் விஜயை சந்தித்து ஆதவ் அர்ஜுனா அந்த கட்சியில் சேர்ந்து கொண்டார்.

கட்சியில் சேர்ந்த உடன் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் தவெக முதல் முறையாக களமிறங்க உள்ளது. இதை மனதில் வைத்து நடிகர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவியை வழங்கி உள்ளார்.
ஆதவ் அர்ஜுனா விசிகவில் இணைவதற்கு முன்பு திமுகவுக்கு தேர்தல் ஆலோசனைகளை வழங்கும் குழுவில் செயல்பட்ட நிலையில் விஜய் தனது கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக நியமித்துள்ளார். தவெகவில் இணைந்து பதவியை பெற்ற கையோடு இன்று இரவு சென்னையில் உள்ள விசிக அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை, ஆதவ் அர்ஜுன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்புக்கு பிறகு ஆதவ் அர்ஜுனா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒரே கருத்தியல், கொள்கை ரீதியாக பெரியார், அம்பேத்கர் தொடர்பாக திருமா அண்ணனிடம் தான் பெரிய கருத்துகளை உள்வாங்கி கள அரசியலலை கற்று கொண்டடேன். இந்த பயணத்தின்போது எந்த முடிவு எடுத்தாலும் அண்ணனோடு கலந்துரையாடி ஆசி பெற்று மக்களுக்கான பணியை தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
இந்த சந்திப்பை மரியாதை நிமித்தம் என்பதை விட வாழ்த்து பெறவும், ஆசி பெறவும் இங்கு வந்துள்ளேன் என்று தான் கூற வேண்டும். தமிழக வெற்றி கழகத்தில் எனது பணி என்பது கொள்கை ரீதியிலான மக்களுக்கான பணியாக இருக்கும். அண்ணனின் வாழ்த்துகளும், ஆசி வழங்கி உள்ளார். பொறுமையாக போ என்று கூறினார். நிறைய அறிவுரைகளை கூறி இருக்கிறார். அண்ணனுக்கு நன்றி.
அதிகாரத்தை நோக்கிய பயணத்தில் கொள்கைப்படி அரசியலை உருவாக்க வேண்டும் என்று கூறினார். பெரியார், அம்பேத்கர் கொள்கையில் உயிர் மூச்சு இருக்கும்வரை எனது பயணம் இருக்கும். மதவாதம், ஜாதிய வாதத்துக்கு எதிராக நாங்கள் அரசியல் செய்கிறோம்’’ என்றார்.
இந்த வேளையில், ‛‛எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நீங்கள் ஒன்றாக சேர்ந்து செயல்படுவீர்களா?’’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஆதவ் அர்ஜுனா, ‛‛ தவெக கட்சி தலைவரும், விசிகவும் ஒரே கருத்து, ஒரே கொள்கையில் தான் பயணிக்கிறது. ஒரே துருவத்தில் கொள்கை அடிப்படையில் எங்களின் பயணம் இருக்கும். கொள்கை அடிப்படையில் இப்போதும் ஒற்றுமையாக தான் உள்ளோம்’’ என்றார். இதனை திமுக கவனிக்க தொடங்கி உள்ளது.
ஏற்கனவே விசிகவில் கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்தபோது ஆதவ் அர்ஜுனா திமுவுக்கு எதிரான கருத்துகளை பேசியிருந்தார். குறிப்பாக உதயநித ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது திமுக - விசிக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தான் விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இப்போது அவர் தவெகவில் இணைந்து மீண்டும் திருமாவளவனிடம் ஆசி பெற்றுள்ளதோடு கொள்கை ரீதியாக இப்போதும் ஒற்றுமையாக தான் உள்ளோம் என்று கூறியிருப்பது திமுகவினரை கவனிக்க வைத்துள்ளது












Click it and Unblock the Notifications