தவெகவை முடக்க முயற்சி.. தூக்கமில்லாமல் திமுக தவிக்குது! புஸ்ஸி ஆனந்துக்காக களத்தில் இறங்கிய விஜய்
சென்னை: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தி மீது திருச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை பார்த்து திமுகவுக்கு தூக்கம் போய்விட்டது எனவும், காவல்துறை மூலம் தங்கள் செயல்பாட்டை முடக்க நினைப்பதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.
அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக அனுமதி கேட்டு கடந்த சில தினங்களாகவே தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சியில் முகாமிட்டிருந்தார்.

தவெக விஜய்
முன்னதாக விஜயின் பிரச்சாரத்துக்கு அனுமதி கேட்கும் வகையில் திருச்சிக்கு விமான மூலம் வந்தார் புஸ்ஸி ஆனந்த். அப்போது விமான நிலையத்தில் கூடிய தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து அருகே இருந்த விநாயகர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய ஆனந்த சென்ற போது கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றனர். பலர் தங்கள் வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புஸ்ஸி ஆனந்த்
அப்போது வாகனங்களை எடுக்கச் சொல்லிய போலீசாருடன் தமிழக வெற்றி கழகத்தினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆனந்த் உள்ளிட்டோர் மீது போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், காவல்துறையினரை செய்யவிடாமல் தடுத்தது, வாக்குவாதம் செய்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தை பார்த்து பயப்படும் திமுக, காவல்துறையின் மூலம் முடக்க நினைப்பதாக விஜய் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
விஜய் கண்டனம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.
திமுக
தேர்தல் பிரசாரப் பயணம் என்பது, அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள்.
காவல்துறை
அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் நமது கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, திரு. என்.ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications