விஜய் 4 மணிநேரம்தான் தாமதம்! ஆனால்..! மதியழகனையும் கோர்த்துவிட்ட புஸ்ஸி ஆனந்த்
மதுரை: தவெக தலைவர் விஜய் 4 மணிநேரம் தாமதமாகத்தான் கரூர் பரப்புரைக்கு வந்தார். 7 மணி நேரம் தாமதம் இல்லை. ஆக மொத்தம் பரப்புரைக்கு அனுமதிக்கப்பட்ட பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணிக்குள் விஜய் வந்துவிட்டார் என புஸ்ஸி ஆனந்த் வாதம் செய்துள்ளார்.
முன்ஜாமீன் கோரிய மனுவில் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் முன் வைத்த வாதத்தில் தவெக தலைவர் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தார் என்கிறார்கள். ஆனால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரைதான். எனவே விஜய் 7 மணிக்கு கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு வந்துவிட்டார். இதனால் 4 மணி நேரம் மட்டுமே தாமதம்.
இந்த பரப்புரைக்கு ஏற்பாடுகளை செய்தது கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன்தான். அவர்தான் பொறுப்பு. ஆனால் மதியழகனும் எந்த தவறையும் செய்யவில்லை. காவல் துறைதான் கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் தவறு செய்துவிட்டது. ஒரு பொதுச் செயலாளர் எப்படி தொண்டரை கொலை செய்ய முயற்சி செய்வார்? என்றும் ஆனந்த் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
நடந்தது என்ன?
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என 41 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் உடல்கள் துரிதமாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

போஸ்டர்
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் விஜய், கரூரில் பாதிக்கப்பட்டவர்களை போய் சந்திக்காமல், நேராக சென்னைக்கு கிளம்பி வந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யை கைது செய்ய வேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அந்த பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பது குறித்து தகவல் தெரிவித்தும் புஸ்ஸி ஆனந்தும், நிர்மல் குமாரும் கேட்கவில்லை என காவல் துறை தரப்பில் கூறப்பட்டு அவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவு
அவர்கள் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆனந்தும் நிர்மல் குமாரும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில் கூறியிருப்பதாவது: முன்கூட்டியே திட்டமிட்டு குண்டர்கள் தவெக கூட்டத்திற்குள் நுழைந்து ஆயுதங்களால் தாக்கினர்.
விஜய் கூட்டத்தில் குண்டர்கள்
கூட்டம் அதிகரித்ததும் சில குண்டர்கள் விஜய் மீது காலணிகளை வீசினர். நம்பர் பிளேட் இல்லாத ஆம்புலன்ஸ் கூட்டத்திற்குள் காவல் துறையால் அனுமதிக்கப்பட்டது. காவல்துறையும் தடியடி நிகழ்த்தியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை (அக்.3) அன்று விசாரணைக்கு வரும் என சொல்லப்பட்டது. அந்த வகையில் அவர்களது முன்ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை தொடங்கி இரு தரப்பு வாதங்கள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications