Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, அக்கட்சியின் எம்எல்ஏக்கள் தொகுதிகளில் தீவிர கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சாலைகள், குடிநீர் திட்டங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கி வருகின்றனர். ஆனால் இந்த ஆய்வு நிகழ்வுகளே தற்போது தவெக தலைமைக்கு தலைவலியை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆய்வுக்குச் செல்லும் தவெக எம்எல்ஏக்கள் தங்களுடன் கேமரா குழுக்களையும், சமூக வலைதள நிர்வாகிகளையும் அழைத்துச் சென்று, ஒவ்வொரு நிகழ்வையும் வீடியோவாக பதிவு செய்து உடனுக்குடன் "ரீல்ஸ்" வடிவில் வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.

TVK

இதனால் சில அரசு அதிகாரிகள் நெருக்கடிக்கு ஆளாகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 தேர்தலில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தின் ஆளுங்கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே மக்கள் மத்தியில் வீரியமான அரசாக தன்னை காட்ட முயற்சித்து வருகிறது.

தவெக எம்எல்ஏக்கள்

இதன் ஒரு பகுதியாக பல எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளில் அடிக்கடி நேரடி ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த காலங்களில் நடந்த ஆய்வு நிகழ்வுகளுக்கும், தற்போது நடைபெறும் ஆய்வுகளுக்கும் இடையே ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். முன்பெல்லாம் எம்எல்ஏக்கள் ஆய்வுக்குச் செல்லும்போது அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள் புகைப்படங்களையும் செய்திக் குறிப்புகளையும் தயாரித்து வெளியிடுவார்கள்.

ரீல்ஸ் அரசியல்

அவை உரிய நடைமுறைகளை பின்பற்றிய பிறகே ஊடகங்களுக்கும் சமூக வலைதளங்களுக்கும் அனுப்பப்படும். ஆனால் தற்போது சில தவெக எம்எல்ஏக்கள், தங்களது தனிப்பட்ட சமூக வலைதள குழுக்களையே அதிகம் நம்புவதாக கூறப்படுகிறது. ஆய்வுக்குச் செல்லும் இடங்களில் அதிகாரிகளுடன் நடக்கும் உரையாடல்கள், பொதுமக்களின் குறைகள், உடனடியாக வழங்கப்படும் உத்தரவுகள் உள்ளிட்ட அனைத்தும் நேரடியாக வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன.

சமூக வலைதள அரசியல்

இதனால் பொதுமக்கள் மத்தியில் எம்எல்ஏக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், நிர்வாக ரீதியாக சில சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர். எந்த ஒரு ஆய்வு நிகழ்விலும் அதிகாரிகள் வழங்கும் தகவல்கள் அனைத்தும் இறுதி நிலை தகவல்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில் தொடக்க கட்ட தகவல்கள் மட்டுமே இருக்கும். பின்னர் அவை திருத்தப்படலாம். ஆனால் அந்த தகவல்கள் அப்படியே சமூக வலைதளங்களில் வெளியானால் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகும் அபாயம் உள்ளது.

கள ஆய்வு

மேலும், ஒரு குறிப்பிட்ட திட்டம் அல்லது பணியைப் பற்றி ஆய்வு நடக்கும் போது அதிகாரிகளிடம் எம்எல்ஏக்கள் கடுமையாக கேள்வி எழுப்பும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகின்றன. இது பொதுமக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதிகாரிகள் மத்தியில் ஒரு மனஅழுத்தத்தை உருவாக்குவதாக கூறப்படுகிறது. சில அதிகாரிகள் கூறுகையில், "ஆய்வுக்கு செல்வதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உடனடியாக வெளியிடப்படும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலை உருவாகிறது. சில நேரங்களில் அது நிர்வாக பணிகளை சிரமப்படுத்துகிறது" என தெரிவிக்கின்றனர்.

தவெக ஆதரவாளர்கள்

அதேநேரத்தில், தவெக ஆதரவாளர்கள் இதை வேறு கோணத்தில் பார்க்கின்றனர். கடந்த காலங்களில் மக்கள் பிரதிநிதிகள் ஆய்வுக்கு சென்றாலும், அதன் விவரங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக தெரியாது. ஆனால் தற்போது அனைத்தும் வெளிப்படையாக நடக்கிறது. மக்கள் தங்கள் தொகுதி எம்எல்ஏ என்ன செய்கிறார் என்பதை நேரடியாக பார்க்க முடிகிறது என்று அவர்கள் வாதிடுகின்றனர். சமூக வலைதள காலத்தில் அரசியல்வாதிகள் மக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதிகாரிகள் அதிருப்தி

குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்களை சென்றடைய "ரீல்ஸ்" மற்றும் ஷார்ட் வீடியோக்கள் முக்கிய கருவியாக மாறியுள்ளன என்பதும் குறிப்பிடப்படுகிறது. எனினும், நிர்வாக நடைமுறைகள் மற்றும் அரசியல் விளம்பர அணுகுமுறைகள் இரண்டுக்கும் இடையே சரியான சமநிலையை பேண வேண்டிய அவசியம் இருப்பதாக நிர்வாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியிடப்படாமல் இருப்பதும், அதிகாரிகள் தேவையற்ற அழுத்தத்திற்கு உள்ளாகாமல் செயல்படுவதும் முக்கியம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

முதல்வன் அரசியல்

இதற்காக அரசு தனியான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் ஆட்சியின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் என்றாலும், நிர்வாக ஒழுங்குமுறைகளும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. தவெக எம்எல்ஏக்களின் 'முதல்வன் அரசியல்' தற்போது தலைமைக்கும், அரசு அதிகாரிகளுக்கும் புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது என்கின்றனர் 'சில' அதிகாரிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+