ஆடு, மாடுகளுக்கு கூட வழியில்லை; அப்படி என்ன அதிசய ரோடு; யாரை விளாசுகிறார் வேல்முருகன்?
சென்னை: திண்டுக்கல் - பொள்ளாச்சி இடையே சாலை அமைப்பதாக கூறி ஆடு மாடுகளுக்கு கூட வழிவிடாத வகையில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை மீது வேல்முருகன் பாய்ந்துள்ளார்.
சாலையில் இருபுறமும் தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்றால் 5 லட்சம் கொடு 10 லட்சம் கொடு என நிலம் கொடுத்த விவசாயிகளிடமே பேரம் பேசுவது எந்த வகையில் நியாயம் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை வினவியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சென்னை மேயர் யார்? உதயநிதி பிடிவாதம்! மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! நடக்கப்போவது என்ன?
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வரை 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இச்சாலை அமைப்பதற்காக 100க்கும் அதிகமான விவசாயிகளிடம் இருந்து, அப்போதைய அதிமுக அரசு நிலங்களை கையகப்படுத்தி, ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்தது.
6 வழிச்சாலை
இந்த நிலையில், 6 வழிச்சாலைக்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, சாலையின் இருபுறமும் உள்ள விளைநிலங்களுக்குள் விவசாயிகள் செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ஆடு மாடுகள்
ஆடு, மாடு போன்ற கால்நடைகளை விளைநிலங்களில் சென்று மேய்க்கவோ, விளைநிலங்களில் குடியிருக்கும் விவசாயிகள் வெளியே வருவதற்கோ முடியாத நிலையை தேசிய நெடுஞ்சாலைத்துறையும், ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனமும் உருவாக்கியுள்ளது. ஏற்கனவே, விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்த நிலங்களுக்கு, இதுவரை முறையான இழப்பீடு வழங்காத நிலையில், அத்தொகையை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் விவசாயிகள் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
மழைநீர்
பொதுவாக, இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், இருபுறமும் மழை நீர் செல்லும் வகையில் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், திண்டுக்கல் - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் கால்வாய்க்கு பதிலாக, தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டிருப்பதால், மழை நீர் அருகே உள்ள விளைநிலங்களிலேயே தேங்கி, பயிர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
என்ன நியாயம்?
இதன் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், தடுப்புச்சுவரை அகற்ற முடியாது, ஆனால் வழி அமைத்து தருகிறோம், அதற்கு 5 இலட்சம் செலுத்த வேண்டும், 10 இலட்சம் செலுத்த வேண்டும் என விவசாயிகளிடம், ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் பேரம் பேசி வருவது வன்மையாக கண்டிக்கதக்கது. விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்திக்கொண்டு, வழி விடுவதற்காக அவர்களிடமே பேரம் பேசுவது எவ்விதத்தில் நியாயம்?.