கவலைப்படாதீங்க! நல்லது நடக்கும்! வேல்முருகனுக்கு புதிய நம்பிக்கையூட்டிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு உரிய இடப்பங்கீடு வழங்கக்கோரி மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார் வேல்முருகன்.
அப்போது, 'உங்களை எனது சகோதரராகவே பார்க்கிறேன், கவலைப்படாதீங்க, எல்லாம் நன்றாக நடக்கும்' எனக் கூறி வேல்முருகனுக்கு நம்பிக்கையூட்டி இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கொடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களிடம் அறிவுறுத்தியிருப்பதாக ஸ்டாலின் வேல்முருகனிடம் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்த் தாய் வாழ்த்து: சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு வேல்முருகன் தலைமையில் போராட்டம்!
உள்ளாட்சித் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து இடப்பங்கீடு தொடர்பாக பேசியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். தங்கள் கட்சியை வடதமிழக கட்சியாக கருதாமல் தமிழகம் தழுவிய அளவில் கட்டமைப்புள்ள ஒரு கட்சியாக கருத வேண்டும் என வேல்முருகன் எடுத்துக் கூறியிருக்கிறார்.
நல்லது நடக்கும்
மேலும், கடலூர், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, மாவட்டங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு வெற்றிவாய்ப்புள்ள வார்டுகளின் பட்டியலையும் அளித்திருக்கிறார் வேல்முருகன். அதைப்பெற்றுக்கொண்ட ஸ்டாலின், 'திமுக மாவட்டச் செயலாளர்களிடம் உங்க கட்சியை பற்றி சொல்லியிருக்கிறேன், அவர்களை பார்த்து உங்க கட்சி நிர்வாகிகளை பேசச் சொல்லுங்க, எல்லாம் நன்றாக நடக்கும்' என நம்பிக்கை அளித்திருக்கிறார்.
2 வார்டுகள்
மேலும், சென்னை மாநகராட்சியில் 2 வார்டுகள் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்த வேல்முருகன், பாமகவை நேருக்கு நேர் எதிர்த்து போட்டியிடவும் தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதேபோல், கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமகவை நேருக்கு நேர் எதிர்த்து போட்டியிட்டு கடலூர் மாவட்டத்தில் 2 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் மற்ற மாவட்டங்களில் 6 ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளையும் பெற்றிருப்பதாக புள்ளிவிவரங்களை முதல்வரிடம் கூறியிருக்கிறார்.
வேல்முருகன் மகிழ்ச்சி
தமது கோரிக்கை குறித்து முதலமைச்சர் பரிசீலிப்பதாக தெரிவித்ததை அடுத்து மகிழ்ச்சி பொங்க அங்கிருந்து விடை பெற்றிருக்கிறார் வேல்முருகன். விரைவில் திமுக மாவட்டச் செயலாளர்கள் த.வா.க. நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.