டெல்லி போர்க்களமானதற்கு காரணமே மோடி அரசின் பிடிவாதமும் முரட்டுத்தனமும்தான்.. வேல்முருகன்
சென்னை: டெல்லி போர்க்களமானதற்கு காரணமே பிரதமர் மோடி அரசின் பிடிவாதமும் முரட்டுத்தனமும்தான் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:
டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது வன்முறையை ஏவிவிட்டு தடியடி நடத்திய நடுவண் அரசின் நடவடிக்கைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். கார்ப்பரேட் நிறுவனங்களின் பெருமுதலாளிகளுக்காக உலகரங்கில் இந்தியா தலைகுனிய வேண்டிய சூழலை பிரதமர் நரேந்திரமோடி உருவாக்கிவிட்டார் என்றும் குற்றஞ்சாற்றுகிறேன்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களும் தங்களுக்கு எதிரானவை என்று விவசாயிகள் ஆரம்ப நிலையில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் கூட நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பாமல், இந்த மூன்று சட்டங்களையும் அவசரகதியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மோடி அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்களை முழுமையாக தலைமுழுக வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் டெல்லியில் தங்கியிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களோடு மத்திய அரசு பல கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதன் காரணமாக தீவிரமடைந்த போராட்டத்தின் உச்சமாக இன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் அனுமதி பெற்றிருந்தனர். அதன்படி 2 லட்சம் ட்ராக்டர்களுடன் இன்று விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பரித்து நுழைந்தனர். டெல்லியின் எல்லைகளில் அமைந்துள்ள சிங்கு, திகிரி, காசிப்பூர் ஆகிய இடங்களை அவர்கள் வந்தடைந்தபோது, ராஜபாதையில் குடியரசு பேரணி நடை பெறுவதால், உள்ளே அனுமதிக்க முடியாது என காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஆனால் கட்டுக்கடங்காத விவசாயிகள் தடுப்புகளை மீறி உள்ளே நுழைந்தனர். இதைத்தொடர்ந்து எங்கிருந்தோ உத்தரவு வர, விவசாயிகள் மீது தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசி காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் கூட்டத்தில் ஊடுருவிய அடியாட்கள் வன்முறையில் ஈடுபட்டதால், காவல்துறையினர் மிருகத் தாக்குதலை நடத்தினர்.
இதில் உத்தரகாண்ட் விவசாயி நவநீத்சிங் உயிரிழந்தார். அவரது உடலை சாலையில் கிடத்தியும் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் செங்கோட்டையிலும் புகுந்த விவசாயிகள், அங்கு தங்கள் கொடிகளையும் நாட்டினர். அங்கேயும் தடியடி நடத்தப்பட்டது. மொத்தத்தில் தலைநகர் டெல்லி இன்று போர்க்களம் போல் மாறியது. இதற்கு மோடி அரசின் பிடிவாதமும் முரட்டுத்தனமும் தான் காரணம். இந்த நடவடிக்கைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் நலனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் மோடி அரசானது இனியாவது நாட்டின் நலன் கருதி உடனடியாக மூன்று விவசாய விரோத சட்டங்களையும் தலைமுழுகிட வேண்டும்.. இல்லையேல் இந்தியாவுக்கு உலக அரங்கில் ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைத்தெறிந்துவிட முடியாது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு வேல்முருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications