தாத்தாவின் வலதுகரம்.. கேள்விபட்ட உடனேயே.. ஓடோடிச் சென்று சந்தித்த உதயநிதி! நெகிழ்ந்த சண்முகநாதன்!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சென்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலம் விசாரித்தார். அப்போது உதயநிதியின் பணிகளை கண்டு சண்முகநாதன் வாழ்த்தியுள்ளார். இதை நெகிழ்ச்சியுடன் உதயநிதி ட்விட்டரில் கூறியுள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதில், "முத்தமிழறிஞர் கலைஞரின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர். கலைஞருடைய அரசியல் வாழ்வின் ஆவணம். சண்முகநாதன் மாமா அவர்களை மருத்துவமனையில் இன்று சந்தித்து நலம் விசாரித்தேன். எனது பணிகளை குறிப்பிட்டு நெகிழ்ச்சியோடு வாழ்த்திய மாமா அவர்களுக்கு அன்பும் நன்றியும்" என்று கூறியுள்ளார்.
50 ஆண்டுகளாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளராக இருந்தவர் தான் சண்முகநாதன். கோபாலபுர இல்லம், முரசொலி அலுவலகம், அரசியல் மேடைகள் என கருணாநிதி செல்லும் அனைத்து இடங்களிலும் கூடவே சென்று வந்தவர் சண்முகநாதன்.
எப்படி சேர்ந்தார்
சண்முகநாதனை கருணாநிதி எப்படி இந்த பணிக்கு அழைத்துக் கொண்டார் என்பதை, ஒருமுறை கருணாநிதியே கூறியுள்ளார். அவர் கூறுகையில்" முன்பெல்லாம் பேராசிரியர், என் போன்றோரின் பேச்சுகளை உடனுக்குடன் பதிவு செய்து எழுதி மேலிடத்துக்கு அனுப்பும் பணியை காவல் துறையின் துப்பறியும் பிரிவினர் செய்வார்கள் அப்படி பதிவு செய்த பேச்சுகளை வைத்து வழக்கு போடுவார்கள். அப்படித்தான் ஒருமுறை என் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு போடும் அளவுக்கு அப்படி என்ன நான் பேசிவிட்டேன் என்பதை அறிய, போலீஸிடமிருந்த எனது பேச்சு நகலை வாங்கிப் பார்த்தேன். வியந்தும் போனேன்.
எழுத்து வடிவம்
என்னுடைய பேச்சு, பேராசிரியர் அன்பழகனின் பேச்சு மற்றும் திமுகவினரின் பேச்சுகளெல்லாம் அப்படியே எழுத்து வடிவமாகப் பதிவாகி யிருந்தது. ஒரு எழுத்துகூட தவறாமல் அத்தனையும் பதிவாகி இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 'நீங்கள் இப்படிப் பேசினீர்களா?' என்று நீதிமன்றத்தில் கேள்வி கள் கேட்ட நேரத்தில், 'மனச் சாட்சிப்படி உண்மைதான், அவை நாங்கள் பேசியது தான்' என்று ஒப்புக்கொள்ளவும் நேரிட்டது.
சண்முகநாதன்
யார் இவ்வளவு தெளிவாக எங்கள் பேச்சை அச்சு அசலாக படியெடுத்திருப்பார்கள் என்று விசாரித்தபோதுதான், சண்முக நாதன் பற்றி எனக்கு தெரிய வந்தது. நான் அமைச்சரானபோது, பி.ஏ.வாக யாரைப் போடலாம் என யோசித்த நேரத்தில் சண்முகநாதன்தான் நினைவுக்கு வந்தார். அந்தத் தம்பியை வைத்துக் கொள்கிறேன் என்றேன். சண்முகநாதனைப் பொறுத்த வரை, அவர் என்னுடைய அலுவலகத்திலே வேலை பார்ப்பவர் என்பதைவிட, என்னு டைய அகத்திலே இருந்து பணியாற்றுபவர். வெறும் சம்பளத்துக்காக வந்தவர் அல்ல. இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் அளவுக்கு என்னோடு கலந்து விட்டவர்" என்று கருணாநிதியே கூறியிருந்தார்.
நலம் விசாரித்தார்
இப்படிப்பட்ட சண்முகநாதன் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு நீண்ட நாட்கள் சோகத்தில் இருந்தார். இந்நிலையில் அண்மையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை கேட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தாத்தாவின் வலதுகாரமான சண்முகநாதனை நேரில் சென்று நலம் விசாரித்தார். பொதுவாகவே உதயநிதி, திமுகவின் மூத்த தலைவர்களை, மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசுவதை வாடிக்கையாக கொண்டவர். அந்த வகையில் தாத்தாவின் மனசாட்சியாக திகழந்த சண்முகநாதனை நேரில் சென்று நலம் விசாரித்து இருக்கிறார். அப்போது உதயநிதியின் கையைபிடித்து அவரது பணிகளை சண்முகநாதன் பாராட்டினார்.