உதயநிதி கையில் மிகப்பெரிய பொறுப்பு! டைம் கம்மியா இருக்கு.. ரெடி ஸ்டார்ட்! கலெக்டர்களுடன் பரபர ஆலோசனை
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக நீதித் திட்டங்களில் மிக முக்கியமான திட்டமாக, மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், விண்ணப்பங்கள் இம்மாதம் 20ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.

உரிமைத்தொகை திட்டம்: குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, 21 வயது நிரம்பிய குடும்பத்தலைவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியான குடும்பத் தலைவிகள் யார் யார் என்ற வழிகாட்டு நெறிமுறைகளும் அரசால் வெளியிடப்பட்டுள்ளன. செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று கலைஞர் பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்க உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முக்கியமான பொறுப்பு: திமுக அரசின் மிக முக்கியமான திட்டமான மகளிர் உரிமைத் தொகை உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வகிக்கும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மூலமாக வழங்கப்படுகிறது. தமிழ்நாடே, ஏன் ஒட்டுமொத்த நாடே, இந்த திட்டத்தை திமுக அரசு எப்படி வெற்றிகரமாக செயல்படுத்தப் போகிறது என்பதை உன்னிப்பாக உற்று நோக்கி வருகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்களை பெறுவது, பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பது, மாதந்தோறும் குடும்பத் தலைவிகளின் கணக்குகளில் ரூ.1000 உரிமைத்தொகையை எந்தவித சிக்கலும் இன்றி வரவு வைப்பது என நிர்வாக ரீதியாக தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டிய பணி உள்ளது.

மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை: இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில் அந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மிகப்பெரிய திட்டம், உதயநிதி ஸ்டாலினின் பொறுப்பில் வழங்கப்பட்டுள்ளதால், இந்தத் திட்டத்தை திறம்படச் செயல்படுத்தி மக்கள் மத்தியில் பாராட்டுப் பெறுவாரா உதயநிதி என்பதற்கான விடை போகப்போகத் தெரியும்.












Click it and Unblock the Notifications