"சந்தேகமே வேண்டாம்.. உதயநிதி தான் அடுத்த தமிழ்நாடு.. ஏனென்றால்" புது காரணத்தை சொன்ன அன்பில் மகேஷ்
சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர்பாபு கலந்து கொண்டனர்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏவும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது.
இன்றும் கூட தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி துறைமுக தொகுதியில் உள்ள 310 கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தயாநிதி மாறன்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர் பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.. இந்தக் கூட்டத்தில் பேசிய எம்பி தயாநிதி மாறன், "3 ஆண்டுகள் உள்ள படிப்பை புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் 4 ஆண்டுகளாக மாற்ற முயல்கின்றனர். ஆங்கிலம் படித்தவர்கள் தான் உலகத்தையே ஆள்கிறார்கள். கூகுள் தலைவர் கூட ஆங்கிலம் தெரிந்த தமிழர் தான். எனவே நமக்குத் தாய்மொழி, ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே போதும். தேவைப்பட்டால் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். இந்தி பேசும் மாநிலங்களில் தான் பாஜக வெல்கிறது. பாஜக மத வாரியாக மக்களைப் பிரித்து அரசியல் செய்கிறார்கள்" என்றார்.

அமைச்சர் சேகர்பாபு
அடுத்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மறைந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா நினைவாகக் கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளுக்காக ஏற்கனவே 13 நிகழ்ச்சிகளை ஆரம்பித்தோம். அது இப்போது 20 நிகழ்ச்சியாக அதிகரித்து உள்ளது. கனமழை காலத்திலும் இரவு பகல் பார்க்காமல் தூய்மை பணியாளர்கள் வேலை செய்தார்கள். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளோம். இன்று பயன் பெறும் நீங்கள், படித்து முடித்து நல்ல நிலைக்குச் சென்று நாளை மற்றவர்களுக்கு உதவும் நிலைக்குச் செல்ல வேண்டும் என்றார்.

மொழி விவகாரம்
தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், "இங்கு இந்தி மொழியைத் திணிக்கச் சிலர் முயல்கின்றனர். அது நடக்காது. திமுக இளைஞரணி செயலாளர் இந்தி திணிப்புக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.. அது சரி இரு மொழிக் கொள்கை பற்றி கருணாநிதியின் பேரன் பேசாமல் வேறு யார் பேசுவார். திமுக என்பது வெறும் அரசியல் கட்சி இல்லை. இது மக்கள் இயக்கம். மக்களைக் காக்கத் தொடங்கப்பட்ட இயக்கம்.

உதயநிதி
பொதுமக்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தருவது தான் எங்கள் வேலை. கருணாநிதியை பொறுத்தவரை அவருக்கு அனைவரும் ஒன்று தான். கடைக்கோடி தொண்டரையும் ஒரு மாதிரி தான் பார்ப்பார். உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி தர வேண்டும் என நாங்கள் முதலில் சொன்ன போது, தலைவர் ஸ்டாலின் உடனடியாக அதை ஏற்றுக்கொள்ளவில்லை. முதலில் தேர்தலில் பிரசாரம் செய்யட்டும் அதன் பிறகு பார்க்கலாம் என்றே முதலில் சொன்னார்.

புது காரணம்
உதயநிதி என்றாலே உழைப்பு, உடன்பிறப்பு, உயர்வு தான். பொதுவாக உதயநிதியை சந்திப்பதே கடினம். இருப்பினும், மாணவர்கள் அல்லது இளைஞர்களுக்கான நிகழ்ச்சி என்றால், உடனே அவர் அனைத்து வேலையையும் விட்டுவிட்டு வருவார். இளைஞர்களுக்கும் மாணவர்களுக்குமான திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இளைஞர்களே அடுத்த சமுதாயம் என்று பொதுவாகச் சொல்வார்கள். அப்படித்தான் எங்கள் இளைஞரணி செயலாளர் உதயநிதியே அடுத்த தமிழ்நாடு என்று சொல்லும் நிகழ்வு இது" என்றார்.












Click it and Unblock the Notifications