ஒரே போட்டோ.. மொத்தமா முடிஞ்ச்ச்.. ஏற்கனவே கடுப்பில் இருக்கும் பாஜகவினரை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்!
சென்னை : பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது ஒன்றிய அரசு என பலமுறை அழுத்தமாகப் பதிவு செய்ததுடன் நீட் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துப் பேசினார்.
ஒன்றிய அரசு என பலமுறை அழுத்திக் குறிப்பிட்டுப் பேசியது பாஜகவினர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், ஸ்டாலின் பிரதமரை இழிவுபடுத்திவிட்டார் எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், கண்ணீர் வரும்படி சிரித்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு மறைமுகமாக பாஜகவினரை கலாய்த்துள்ளார்.
பிரதமர் மோடி முன் முதல்வர் ஸ்டாலின் உரிமைக் குரல்! பாஜகவை கதிகலங்கவைத்துள்ளதாக குவிந்த பாராட்டுகள்!
ஸ்டாலின் பேச்சு
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது ஒன்றிய அரசு என பலமுறை அழுத்தமாகப் பதிவு செய்ததுடன் நீட், ஜிஎஸ்டி, தமிழ் அலுவல் மொழி மற்றும் கச்சத்தீவு உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துப் பேசினார்.
திராவிட மாடல்
திராவிட மாடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கமும் கவனத்தை ஈர்த்தது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானது. தமிழ்நாட்டின் வளர்ச்சி பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல, சமூக நீதி, சமுத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற்றம் இவை அனைத்தும் சேர்ந்தது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் பேசினார். முதல்வரின் இந்தப் பேச்சை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
ஆத்திரப்பட்ட அண்ணாமலை
பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டே முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்த கோரிக்கைகளும், கூட்டாட்சி, திராவிட மாடல் கருத்துகள் திமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் பாஜகவினர் இந்த விஷயத்தால் பயங்கர கடுப்பாகியுள்ளனர். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, இந்தியாவின் ஒரு சாதாரண குடிமகனாகவும், ஒரு பெருமைமிகு தமிழனாகவும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மோசமான நடத்தையை கண்டு வெட்கி தலைகுனிகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
ஸ்டாலினின் அற்ப அரசியல்
மேலும் பேசிய அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி, ஒரு நாட்டின் பிரதமராக இன்று சென்னை வந்தார். அவர் பாஜக நிகழ்ச்சிக்காக வரவில்லை. இன்றைய நிகழ்ச்சியில் பிரதமரிடத்தில் நம் முதல்வர் மரியாதை காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொண்டார். முதல்வர் ஸ்டாலின் அற்ப அரசியல் மட்டுமே செய்து வருகிறார் என வெகுண்டெழுந்து கோபமாகப் பேசியுள்ளார்.
உதயநிதி ட்வீட்
இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். சட்டப்பேரவையில் இருக்கும்போது உதயநிதி ஸ்டாலின் கண்கள் கலங்கும்படி சிரித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் உதயநிதியின் நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இருக்கிறார்.