'ஆண்மையுள்ள'.. வார்த்தை விட்ட அமைச்சர் கோவி செழியன்.. உடனே திருத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: சர்வாதிகார போக்குடன் செயல்படும் ஒன்றிய அரசை எதிர்க்கின்ற ஆண்மையுள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேசினார். அப்போது குறுக்கிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தனது பேச்சில் கூறிய ஆண்மை என்ற சொல்லை திருத்த விரும்புகிறேன். ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கின்றனர். ஆண்மை என்றால் வீரம் என்றெல்லாம் இல்லை. ஆணுக்கு பெண் சரிசமம் என்பதையே குறிப்பிடுகிறேன்' என்று கூறினார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழலை, அரசாங்க சூழலை பொறுத்தவரை.. மாநிலத்திற்கு உள்ள கல்விகளை எல்லாம் ஒழித்துவிட்டு, ஒரே கல்வி பாடத்திட்டத்தை, ஒற்றை அரசாக, சர்வாதிகார போக்காக, ஒன்றிய அரசு திணிக்க முற்படுகிற போது, இந்தியாவில் இருக்கிற மாநிலங்களில், துணிந்து எழுந்து நிற்கிற ஆண்மையுள்ள மாநிலம் தமிழ்நாடு என்பதை இன்றைக்கு உற்றுநோக்குகிற காலக்கட்டத்தில், நாம் நம்முடைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை இங்கு நாம் பெற்றிருக்கிறோம்" என்றார்.

அந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, இங்கே உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் உரையாற்றும் போது, ஒரு விஷயத்தை குறிப்பிட்டார். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கு எந்த தீங்கு வந்தாலும், ஒரு இடர்பாடு வந்தாலும், முதலில் குரல் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று குறிப்பிட்டார். அப்படி குறிப்பிடும் போது ஒரு வார்த்தைய குறிப்பிட்டார். ஆண்மையுள்ள மாநிலம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதில் எனக்கு ஒரு சின்ன திருத்தம் உள்ளது. இங்கே ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கின்றார்கள். எனவே ஆண்மை என்றால் தனியாக வீரம் என்றெல்லாம் கிடையாது.. அவர் குறிப்பிடும் போது, இந்தியாவிலேயே அதிகமாக பெண் போலீஸ் உள்ள மூன்றாவது மாநிலம் தமிழ்நாடு என்று கூறினார். நான் அவரிடத்தில் தெரிவிப்பது, உங்களிடத்தில் தெரிவிப்பதும் ஒன்று..இங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு இல்லை.. ஆணுக்கு பெண் சரிசமம் என்பதை இங்கே குறிப்பிடுகிறேன்." இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
கடந்த ஒரு மூன்று நாட்களாகவே மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகிறது. மூன்று மொழிகளை கற்கவிடாமல் அரசு பள்ளி மாணவர்களை மட்டும் வசிப்பதாக தமிழக அரசு மீது பாஜக குற்றம்சாட்டி வருகிறது. அதேநேரம் தமிழக அரசோ மும்மொழி கொள்கையை அமல்படுத்த எந்த காலத்திலும் அனுமதிக்க மாட்டோம் என்றும், இந்தியை திணிக்கும் முயற்சி தான் மும்மொழிக்கொள்கை என்றும் குற்றம்சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications