13 வருட தாம்பத்யம்.. குறுக்கே வந்த திருப்பூர் மாமியாரை ஒரே சீவு.. கற்பனை பண்ண முடியாத உடுமலை சம்பவம்
சென்னை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடும்பத் தகராறில் மாமியாரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டார் கோபக்கார மருமகன்.. கொலையை செய்துவிட்டு, அதுகுறித்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலம், ஒட்டுமொத்த பேரையும் பெரும்அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.. அப்படி என்ன நடந்தது திருப்பூர் மாவட்டத்தில்? யாரிந்த மருமகன்?
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்தவர் 41 வயதான அஜ்மத் உசேன்.. கூலித்தொழிலாளியான இவருக்கும், தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.. இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்..

மாமியார் - மருமகன் தகராறு
இந்நிலையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தஸ்லீமா பேகம் கடந்த 4 மாதங்களாக, தனது குழந்தைகளுடன் அமராவதியில் உள்ள தாய் ஆசியம்மாள் (48) வீட்டில் வசித்து வந்தார்.. மேலும் அவர் அஜ்மத் உசேனை விவாகரத்து செய்யவும் முயற்சி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது..
தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ விரும்பிய அஜ்மத் உசேன், கடந்த 16 ம் தேதி இரவு அமராவதியில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றார்.. அப்போது தஸ்லீமா பேகமும் குழந்தைகளும் வீட்டில் இல்லை.. மாமியார் ஆசியம்மாள் மட்டும் தனியாக இருந்துள்ளார்.. அஜ்மத் உசேன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டபோது, ஆசியம்மாள் அதற்குச் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது..
ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆசியம்மாள்
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.. ஆத்திரமடைந்த அஜ்மத் உசேன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் ஆசியம்மாளைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆசியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்..
தகவலறிந்து வந்த அமராவதி போலீசார் ஆசியம்மாளின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. தலைமறைவாக இருந்த அஜ்மத் உசேனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.. இந்நிலையில் குதிரையாறு சோதனைச்சாவடி அருகே பதுங்கியிருந்த அஜ்மத் உசேனை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்..
பகீர் வாக்குமூலம்
அப்போது போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "நான் என் மனைவியுடன் சேர்ந்து வாழவே ஆசைப்பட்டேன்.. ஆனால் என் மாமியார்தான் அவளை என்னிடம் விடாமல் தடுத்து வந்தார்.. என் மகன்களைப் பார்க்கவும் அவர் இடையூறாக இருந்தார்.. அவர் இருக்கும் வரை என் குடும்பம் ஒன்று சேராது என்பதால் ஆத்திரத்தில் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்..
அஜ்மத் உசேன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஒரு சின்ன குடும்ப தகராறு, ஒரு பெண்ணின் உயிரைப் பறித்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துவிட்டது.. இந்தச் சம்பவம் திண்டுக்கல், திருப்பூர் பகுதிகளில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications