உங்களை தேடி உங்கள் ஊரில்.. வீடு தேடி வரும் கலெக்டர்.. வழிகாட்டு நெறிமுறை என்ன?.. அரசாணை ரிலீஸ்
சென்னை: உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' முகாம் ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு என்ன தேவை என்றாலும் அதிகாரிகளைத் தேடி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இ சேவா மையங்கள் வந்த பிறகு சான்றிதழ்கள் பெறுவது எளிமையாக மாறியது. வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர்கள் மக்களிடம் இருந்து மனுக்களை பெறுகின்றனர்.

அதே போல மக்கள் குறைதீர்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்களின் குறைகளை தீர்க்க தமிழ்நாடு அரசின் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தை கடந்த மாதம் தொடங்கியது. அரசின் சேவைகளை மக்கள் எளிதாய் பெற, அரசு திட்டங்களில் மக்கள் விரைந்து பலன்பெற உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் மக்களை நேரடியாக சந்தித்து, குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில்; 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' முகாம் ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை நடத்தப்பட வேண்டும். ஜனவரி முதல் டிசம்பர் வரை ஆண்டு முழுவதும் அனைத்து தாலுகாக்களும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில், ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ஆண்டிற்கான அட்டவணையை மாவட்ட ஆட்சியர் வரைய வேண்டும்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அலுவலர்கள், நிலுவையில் உள்ள மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'உங்களை தேடி, உங்கள் ஊரில்' முகாம்கள் நடத்துவது குறித்த அறிக்கையை ஒவ்வொரு மாதம் 5ம் தேதிக்கு முன், கூடுதல் தலைமைச் செயலர்/வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications