வடியாத வெள்ளம்! ஹெலிகாப்டர் மூலம் ராஜ்நாத் சிங் ஆய்வு.. பாதிப்புகள் குறித்து முதல்வருடன் ஆலோசனை
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சமீபத்தில் சென்னையை ஒட்டி கரையை கடந்த மிக்ஜாம் புயல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் என 4 மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில் இந்த வெள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு, ரூ.5,060 கோடியை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மட்டுமல்லாது மத்திய குழுவை அனுப்ப பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்நிலையில் டெல்லியிலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.
அவருடன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பயணித்துள்ளனர். ஆய்வை முடித்துவிட்டு பின்னர் கார் மூலம் தலைமை செயலகம் வந்த ராஜ்நாத் சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டார். வெள்ள பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசு சார்பில் ரூ.5,060 கேட்கப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக ரூ.450 கோடியை மாநில அரசு விடுவித்திருந்தது.
ஆலோசனையை முடித்துவிட்டு முதலமைச்சரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், "தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். புயல், மழை பாதிப்பிலிருந்து தமிழகம் மீள அனைத்து உதவிகளும் செய்யப்படும். சென்னை வெள்ள மேலாண்மை பணிகளுக்காக ரூ.561 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய விரைவில் ஆய்வுக்குழு தமிழகம் வரும்" என்று கூறியுள்ளார்.
அதேபோல, "நிவாரண பணியை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5060 கோடி வழங்கக் கேட்டுக் கொண்டேன். தமிழ்நாடு அரசின் கோரிக்கையைப் பரிசீலித்து உரிய நிவாரண நிதி வழங்க ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டேன்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications