'பொங்கல் பரிசு தொகுப்பு'.. தமிழக அரசை பாராட்டி தள்ளிய மத்திய உணவுத்துறைச் செயலாளர்!
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கரும்பு ஆகிய 21 பொருட்கள் வழங்கப்படுகின்றன.

பொங்கல் பரிசு தொகுப்பு
மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவில் இந்த பரிசு தொகுப்புபொருட்கள் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படுகின்றன. பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்குவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மக்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக டோக்கன்களும் விநியோகப்பட்டுள்ளன.

மத்திய உணவுத்துறைச் செயலாளர் பாராட்டு
இந்த நிலையில் தமிழக அரசு வழங்கும் 'பொங்கல் பரிசு தொகுப்பு' வரவேற்கத்தக்கது என மத்திய உணவுத்துறைச் செயலாளர் சுதான்ஷூ பாண்டே பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொது விநியோக திட்டம் நாட்டிலேயே சிறப்பானது. பொங்கல் பண்டிகைக்காக அரசு மக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வரவேற்கத்தக்கது என்று சுதான்ஷூ பாண்டே நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறினார்.

அத்தியாவசிய பொருட்கள் பெறாத குடும்ப அட்டைகள்
3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசிய பொருட்கள் பெறாத குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து உண்மைத் தன்மையின் அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து அரிசி கொள்முதல் மும்மடங்காக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு
தமிழக அரசு பொங்கல் பரிசு பொருட்கள் இன்று முதல் வழங்கும் நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு தொகுப்பு பொருட்களுடன் ரூ.2,000 ரொக்க பணமும் வழங்கப்பட்டது. இந்த முறை சிறப்பு தொகுப்பு பொருட்களுடன் ரூ.5,000 வழங்க வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் தற்போது பரிசு தொகுப்பில் ரொக்க பணம் ஏதும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications