இப்போது உள்ள பென்சன் முறை.. பிடிக்கவில்லையா.. இதுக்கு மாறுங்க! கடைசி சான்ஸ்.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: மத்திய நிதி அமைச்சகம், புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) இருந்து தேசிய ஓய்வூதிய அமைப்புக்கு (NPS) ஒருமுறை மட்டுமே மாறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓய்வுபெறுவதற்கு ஒரு வருடம் முன்னதாகவோ அல்லது விருப்ப ஓய்வுக்கு மூன்று மாதங்கள் முன்னதாகவோ இந்த மாற்றத்தை மேற்கொள்ளலாம். ஒருமுறை ஓய்வூதிய முறையை மாற்றிய பிறகு, மீண்டும் அதை மாற்ற முடியாது.
பணி நீக்கம் அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கை போன்றவற்றை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு இந்த வசதி பொருந்தாது. ஒருமுறை இந்த மாற்றம் செய்யப்பட்டால், ஊழியர்கள் யுபிஎஸ் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பலன்களுக்கு தகுதியற்றவர்கள் ஆவார்கள். அரசு வழங்கும் 4% கூடுதல் பங்களிப்பு, வெளியேறும் நேரத்தில் ஊழியரின் என்.பி.எஸ் கணக்கில் சேர்க்கப்படும்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
மத்திய அரசு, 2024 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அறிமுகப்படுத்தியது. ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்த இந்தத் திட்டம், ஓய்வூதியப் பாதுகாப்பில் ஒரு புரட்சிகரமான மாற்றமாகப் பார்க்கப்பட்டது. தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) மாற்றாக வடிவமைக்கப்பட்ட யுபிஎஸ், அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
இந்தத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகிய இரண்டின் முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. எனினும், ஓய்வூதியம் கணக்கிடப்படும் முறை, ஊழியர் செலுத்த வேண்டிய பங்களிப்பு மற்றும் அதிக பென்சன் பெறுவதற்கான தகுதிகள் குறித்த முழுமையான விவரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை.
புதிய ஓய்வூதிய திட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை செய்தவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். யுபிஎஸ் திட்டத்தில் அதிக ஓய்வூதியம் பெற, 25 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும். ஓய்வுபெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும்.
10 ஆண்டுகளுக்குக் குறைவான சேவை காலம் கொண்டவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் குறித்து அரசு தெளிவுபடுத்தவில்லை. 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆனால் 25 ஆண்டுகளுக்கு குறைவான சேவை காலம் கொண்டவர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள். யுபிஎஸ் திட்டத்தின் கீழ், 10 வருட சேவைக்குப் பிறகு ஓய்வுபெறும் போது மாதம் ரூ.10,000 என்ற உறுதியான ஓய்வூதியம் வழங்கப்படும்.
புதிய ஓய்வூதிய திட்ட முறை
இந்த ஓய்வூதியம், (கடைசி 12 மாதங்களுக்கான சராசரி மாத அடிப்படை ஊதியம் x 50% x வேலை பார்த்த வருடங்களின் எண்ணிக்கை) / 25 ஆண்டுகள் என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படும். 25 வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு, கடைசி 12 மாதங்களின் சராசரி மாத அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். இதை (கடைசி 12 மாதங்களுக்கான சராசரி மாத அடிப்படை ஊதியம் x 50%) என்ற சூத்திரம் மூலம் கணக்கிடலாம்.
எனினும், இந்தத் திட்டத்திற்கான வரவேற்பு மந்தமாகவே உள்ளது. ஜூலை 20, 2025 நிலவரப்படி, என்.பி.எஸ்-ல் பதிவுசெய்யப்பட்ட சுமார் 23 லட்சம் ஊழியர்களில் வெறும் 30,989 பேர் (1.35%) மட்டுமே யுபிஎஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மீதான மந்தமான வரவேற்புக்கு சில காரணங்கள் உள்ளன.
குறிப்பாக, ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் அல்லது மொத்தப் பணம் எப்படி வரி விதிக்கப்படும் என்பது குறித்த தெளிவின்மை நிலவுகிறது. என்.பி.எஸ் திட்டத்தில் ஊழியர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்ய விரும்பும் முறையைத் தேர்வு செய்ய முடியும் என்பதால், அதிக வருமானத்திற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் யுபிஎஸ் திட்டத்தில் முதலீடுகள் மீதான கட்டுப்பாடு குறைவாகவே உள்ளது. இளம் ஊழியர்கள் பெரும்பாலும் என்.பி.எஸ்-ஐ விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.
அமலுக்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகியும், மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் இந்தத் திட்டத்தில் இணைவதற்கு பெரிய ஆர்வம் இல்லை என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications