தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்.. அண்ணாமலை மாற்றமா? சென்னை வரும் கிஷன் ரெட்டி.. பரபரக்கும் சீனியர்கள்!
சென்னை: தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 17ஆம் தேதி மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருவதாக தகவல் வந்துள்ளது. 2 நாட்கள் சென்னையில் தங்கவுள்ள கிஷன் ரெட்டி, பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக தேசிய தலைமை சார்பாக ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை உட்கட்சி தேர்தலை பாஜக நடத்தும். அதற்கேற்ப மாநில தலைவர்கள் மற்றும் கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்ய பாஜக தலைமை தரப்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி அளித்த பின், அவரது இடத்திற்கு இளம் நிர்வாகியான அண்ணாமலை கொண்டு வரப்பட்டார். அவரது தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து, புதிய கூட்டணியோடு பாஜக களம் இறங்கியது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை என்றாலும், வாக்கு சதவிகிதம் கணிசமாக உயர்ந்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக பாஜக மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி வரும் 17ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
சென்னை வரும் கிஷன் ரெட்டி 2 நாட்கள் சென்னையில் இருந்து பல்வேறு நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். அதன்பின் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பான அறிக்கையை கிஷன் ரெட்டி கட்சித் தலைமையிடம் அளிப்பார் என்று பார்க்கப்படுகிறது. இதன்பின் தமிழக பாஜகவின் புதிய தலைவரை தேசிய தலைமை அறிவிக்கும்.
தமிழ்நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த சூழலில் பாஜக தலைமையில் மாற்றம் இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனென்றால் ஓராண்டுக்கு முன்பாகவே தேர்தல் பணிகள் தொடங்கி, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட ஏராளமான பணிகளை மாநில தலைவர் செய்ய வேண்டும்.
இதனிடையே மதுரையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை மீண்டும் நியமிக்கப்பட்டதாக சில நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியிருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பாஜக வட்டாரத்தில் பாஜக மாநில தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications