இங்கிலாந்து மெட்ரோவில் மாஸ் விளம்பரம்! லண்டன் பறக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி! என்ன காரணம் தெரியுமா?
சென்னை : செப்டம்பர் 10ஆம் தேதி லண்டனில் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சிலை திறப்பு விழாவிற்கான விளம்பரங்கள் லண்டன் மெட்ரோ இரயில் நிலையங்களில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமி படத்துடன் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை கேரளாவுக்கு மட்டுமல்லாது தமிழகத்தின் உயிர்நாடியாக உள்ளது இந்த அணையின் மூலம் தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் நேரடியாகவும் சில மாவட்டங்கள் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றன.
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய அரசுக்கும், திருவாங்கூர் சமஸ்தான மன்னர் விசாகம் திருநாள் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 999 ஆண்டுகளுக்கு அணையைக் கட்டிப் பராமரித்துக் கொள்வதுடன் அந்த அணையிலிருந்து கிடைக்கும் நீரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையும் ஆங்கிலேய அரசுக்கு அளிக்கப்பட்டது.
இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது
முல்லைப் பெரியாறு அணை
இதன்படி ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு அணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டுமானக் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நோய் பரவலால் தொழிலாளர்கள் 483 பேர் உயிரிழந்த நிலையில் இந்த அணைக் கட்டுமானச் செலவுக்கு அதிகப்படியாக நிதி ஒதுக்கித்தர ஆங்கிலேய அரசு மறுத்தது.
ஜான் பென்னிகுவிக்
இந்நிலையில் ஆங்கிலேய அரசின் கட்டுமானப் பொறியாளராக இருந்த இராணுவப் பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுவிக் அவரது மனைவியின் நகைகள் அனைத்தையும் விற்று அவரது சொந்தப் பணத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இந்நிலையில் தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைப் பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து அமைத்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கை தேனி மாவட்ட மக்கள் தெய்வம் போலவே வணங்கி வருகின்றனர்.
தமிழக அரசு சிலை
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்காக தனது சொந்தப் பணத்தை செலவு செய்து அமைத்த கர்னல் ஜான் பென்னிகுயிக்குக்கு சிலையை, அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ள நிலையில், கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
செப் 10ல் திறப்பு விழா
இந்நிலையில் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி லண்டனில் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. இதற்கான லண்டன்-கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகள் லண்டன் வாழ் தமிழர்களால் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலை திறப்பு விழாவிற்கான விளம்பரங்கள் லண்டன் மெட்ரோ இரயில் நிலையங்களில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமி படத்துடன் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.