ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது.. பொருளாதார அடிப்படையே சரி.. வாத்தி இயக்குநரின் சர்ச்சை பேச்சு!
இடஒதுக்கீடு குறித்து வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லுரி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை குறித்து வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லுரி கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை மத்திய அமைச்சரானால் என்ன மாற்றம் செய்வீர்கள் என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு, ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கூடாது என்றும், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடுவேன் என்று கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். இந்தப் படம் தனியார் பள்ளிகள் மற்றும் கல்வி குறித்து பேசியுள்ளது.
தெலுங்கில் 'சார்' என்ற பெயரிலும், தமிழில் 'வாத்தி' என்ற பெயரிலும் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விளம்பரப் பணிகளுக்காக இயக்குநர் வெங்கி அட்லுரி பல்வேறு நேர்காணல் அளித்துள்ளார்.

வாத்தி பட இயக்குநர்
அந்த வகையில் ஒரு நேர்காணலில் இட ஒதுக்கீடு குறித்து வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லுரியின் கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. இயக்குனர் வெங்கி அட்லுரி அளித்த பேட்டியில் நீங்கள் மத்திய அமைச்சரானால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு இயக்குநர் வெங்கி அட்லுரி அளித்த பதிலே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கி அட்லுரி பதில்
இயக்குநர் வெங்கி அட்லுரி, நான் ஒருவேளை மத்திய கல்வித்துறை அமைச்சரானால் இட ஒதுக்கீட்டை ஒழித்து விடுவேன். இட ஒதுக்கீட்டை ஜாதி அடிப்படையில் வழங்காமல் பொருளாதார அடிப்படையில் வழங்க உத்தரவிடுவேன் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அமலில் இருந்து வருகிறது. இந்த இடஒதுக்கீடு மூலமாகவே ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கொஞ்சம் கொஞ்சமாக படித்து முன்னேறி வருகின்றனர்.

சர்ச்சை
பெரும்பாலான இந்திய குடும்பங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளே இப்போது தான் உருவாகி வருகின்றனர். அதேபோல் இடஒதுக்கீடு மூலமாக மட்டுமே பிற்படுத்தப்பட்ட மக்களும் அதிகாரத்திற்கு வரும் நிலை உள்ளது. இந்த நிலையில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு முறைக்கு ஆதரவாக இயக்குநர் வெங்கி அட்லுரி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பொருளாதார இடஒதுக்கீடு
அண்மைக் காலமாக இந்தியாவில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான பேச்சுகள் அதிகமாகி வருகிறது. இதனால் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்றும், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன. இதனிடையே கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications