இதுவரை எனது மனைவிக்கு 1 கிராம் நகை வாங்கிக் கொடுத்ததில்லை! அவங்க கேட்டதுமில்லை! -வைகோ
சென்னை: இதுவரை தனது மனைவிக்கு 1 கிராம் நகை கூட தாம் வாங்கிக் கொடுத்ததில்லை என்றும் மனைவியும் தன்னிடம் நகை வாங்கிக் கொடுக்குமாறு கேட்டதேயில்லை எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இந்த தகவலை குறிப்பிடுள்ளார்.
மேலும், இது வேண்டும், அது வேண்டும் வாங்கிக் கொடுங்க என ஒரு நாளும் தன் மனைவி கேட்டதே கிடையாது என்றும் திருமண நாள், பிறந்தநாள் என எந்த நாளையும் தாம் கொண்டாடுவதில்லை என்றும் மனைவிக்கு பரிசுப் பொருட்கள் வங்கிக் கொடுத்ததில்லை எனவும் கூறியுள்ளார். இன்றைய இளம் தலைமுறையினர் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்றும் ஓரிரு வருடங்களில் விவாகரத்து கோருவது என்ன மாதிரியான வாழ்க்கை எனவும் வைகோ வேதனையை பகிர்ந்தார்.

வாழ்க்கையை பயனுள்ளதாக அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும் என இன்றைய இளம் தலைமுறையினர் சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்ற மனப்பான்மையை இளம் தலைமுறையினர் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகால இல் வாழ்வில் தனது மனைவி தன்னுடன் ஒரு முறை கூட சண்டை போட்டதே கிடையாது எனவும் வைகோ மனம் திறந்துள்ளார்.
தாம் மூன்று , நான்கு பெண்களை பெண் பார்க்கச் சென்றதாகவும் அந்தப் பெண்களை எல்லாம் பிடிக்கவில்லை எனவும் கடைசியில் ரேணுகாவை தான் பிடித்தது என்பதால் திருமணம் செய்துகொண்டேன் எனவும் 50 ஆண்டுகால பிளாஷ்பேக்கையும் பகிர்ந்துகொண்டார் வைகோ. தன்னிடம் மகன் பிடிக்குமா, மகள் பிடிக்குமா என்று கேட்கத் தேவையில்லை, மகனும், மகளும் இரண்டு பேருமே தனக்கு செல்லங்கள் தான் என பாச உணர்வை வெளிப்படுத்தினார்.
சிலப்பதிகாரம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அதனால் தான் தனது மகளுக்கு கண்ணகி என பெயர் சூட்டியதாகவும் வைகோ தெரிவித்துள்ளார். தன்னுடன் தனது மனைவி எந்த பொது நிகழ்விலும் கலந்துகொண்டதே கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications