அவரென்ன மண்புழுவா..? தலைவியாய் அல்ல... மனுஷியாய் மதிக்க வேண்டாமா...? -வைரமுத்துவின் வேதனை வரிகள்..!
சென்னை: கடலூர் மாவட்டத்தில் பட்டியலின ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமரவைக்கப்பட்ட நிகழ்வுக்கு வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குத்திட்டை ஊராட்சி மன்றக் கூட்டத்தில், அந்த ஊராட்சியின் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட நிகழ்வு தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வேதனைக்குரிய நிகழ்வு குறித்து மனம் பொறுக்காமல் வேதனையான வரிகளில் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.
''பட்டியலினத்துத் தாயொருத்தி தரையில் வீசப்படுவதா?
அவரென்ன மண்புழுவா?
தலைவியாய்க் கூட அல்ல... மனுஷியாய் கூட மதிக்க வேண்டாமா?
என் வெட்கத்தில் துக்கம் குமிழியிடுகிறது
தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டிய துயரங்களுள் இதுவும் ஒன்று''
- என்று தனது வலியை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் வைரமுத்து.
நாட்டில் மண்புழுக்களை விட மோசமான நிலையில் பட்டியலினத்தவர்கள் நடத்தப்படுவதாகவும், சாதியை காரணம் காட்டி நடத்தப்பட்ட இந்த அவமரியாதையை துக்க நிகழ்வாக கருதி தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும் எனவும் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சமூக சார்ந்த பிரச்சனைகளில் அது தொடர்பான தனது கருத்தை ஆழமாக பதிவு செய்பவர் வைரமுத்து. தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் கிஞ்சிற்றும் தயங்கி தடுமாறி நிற்காமல், தனது பேனா முனையை கொண்டு தவறு செய்தவர்களின் புத்திமுனையை கூர் தீட்டி சிந்திக்க வைத்துவிடுவார்.












Click it and Unblock the Notifications