வலம்புரிஜான்..அந்த "மர்ம பக்கம்".. அதைவிடுங்க.. "இதயங்கள் கைகுலுக்குதே".. அன்று சொன்னது ஞாபகமிருக்கா
சென்னை: நினைவிருக்கிறதா வலம்புரிஜானை? இவரை பற்றின செய்திகள், ஏதாவது ஒரு ரூபத்தில் வாசகர் வட்டத்தில் சுழன்றுகொண்டுதான் இன்னமும் இருக்கிறது.
"வார்த்தை சித்தர்" வலம்புரிஜான்.. தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கியவாதி - எழுத்தாளர் - பேச்சாளர் - சிந்தனையாளர்.
மொழி புலமை: வாயை திறந்தாலே, தேன் தடவிய தமிழ் சொற்கள் துள்ளி வந்து விழும்.. தமிழ் மட்டுமல்ல, ஆங்கில மொழியும் அவரிடம் மண்டியிட்டது..!!

30 வயசு முடியும் முன்பே மாநிலங்களவை உறுப்பினரானவர்.. அந்த காரணத்தாலேயே அந்த அரிய பொறுப்பையும் இழந்தவர்.. எம்பி ஆவதற்குரிய வயது பூர்த்தியடைவதற்கு முன்பேயே அவரை மாநிலங்களவைக்கு அனுப்பி அழகு பார்த்தார் கலைஞர் கருணாநிதி..!
எம்ஜிஆர்: எம்ஜிஆரின் தாய் வார இதழின் ஆசிரியராக இருந்தவர் வலம்புரி ஜான். எத்தனையோ இளைஞர்களை தன்னுடைய "தாய்" பத்திரிகை மூலம் உற்சாகப்படுத்தி வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்..!
எம்ஜிஆரின் உத்தரவுக்கேற்ப ஜெயலலிதாவின் அரசியல் பேச்சுகளை எழுதிக் கொடுத்தவர் வலம்புரிஜான்... மாறி மாறி இவர் எடுத்த அரசியல் நிலைப்பாடு அவருக்கே எதிராக திரும்பியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இவரது இறுதிகட்ட வாழ்வு, சோகத்தில் மூழ்கி கிடந்தது.. முழுசும் வஞ்சிக்கப்பட்டு, இருட்டு அப்பி கிடந்தது.. எனினும், அரசியலை தவிர்த்துவிட்டு பார்த்தால், வலம்புரிஜான் பேச்சுக்களும், அவரது எழுத்துக்களும் இன்னும் நூற்றாண்டு காலம் பேசும் வல்லமை படைத்தவை,
தொழில்நுட்பம்: இன்றைய நவீன உலகில்.. மாறி வரும் இந்த விஞ்ஞான தொழில்நுட்பத்தில், உலகமே கைக்குள் அடங்கிவிட்டது. இதனால், கடிதம் எழுதும் பழக்கமே நம்மை விட்டு நீங்கிவிட்டது.. நவீனத்துக்குள் சமூகம் நுழைய துவங்கியபோதே, கடிதத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர் வலம்புரிஜான். கடிதம் எழுதுவதே ஒரு கலை என்பார் வலம்புரி.. கடிதம் எழுதுவதை பற்றி, சிலாகித்து வலம்புயார் எழுதிய வார்த்தைகள்தான் இவை:
"தொலைபேசி வந்துவிட்டது. ஆகவே பேசினால் போதாதா? என்று நாம் நினைக்கிறோம். ஆனால், நேரம் கிடைக்கிறபோதெல்லாம் நமக்கு வருகின்ற கடிதங்களுக்கு நாமே பதில் எழுதுவது ஒரு வாழ்வியல் கதை என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
உண்மை: கடிதத்தில் பெரும்பாலும் நான் உண்மையைத்தான் எழுதுகிறோம். ஒரு காரணம், நாம் பேசியதை இல்லை என்று மறுத்துவிடலாம். ஆனால், எழுதியதை இல்லை என்று சாதிக்க முடியாது.
நம் அம்மா இல்லாத நேரத்தில், அவளது கடிதம் அவளையே நம் முன்னாலே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது இல்லையா? கடிதம் கவிதையை விட சிறந்த இலக்கியம். காரணம், கவிதையாகிலும் கொஞ்சம் கற்பனை கலந்திருக்கும். ஆனால், கடிதத்தில் கற்பனைக்கே இடம் இல்லாமல் உண்மை மாத்திரம்தான் ஊர்வலம் போகும்.

ஒருவர் ஏன் உட்கார்ந்து எழுத வேண்டும் என்றால், அவரே எழுத எழுத உளவியல்படி, அவரது மனம் உறுதியாகிவிடுகிறது. ஆழ்ந்த நிலையில் எந்த சூழ்நிலையிலும் தன்னை இழந்துவிடாத பேராண்மை அவருக்கு வருகிறது.
அடையாளம்: இந்த காரணத்தினாலேதான் ஒரு மந்திர சொல்லை திரும்ப திரும்ப எழுதுவது என்கிற பழக்கமே நமது நாட்டில் வந்தது. கடிதம் என்பது, நமது மரபு இன்னமும் மாய்ந்து விடவில்லை என்பதற்கான அடையாளம்
கடிதங்களால் இதயங்கள் கைகுலுக்கி கொள்கின்றன. முத்து முத்தான எழுத்துக்களில் ஒரு கடிதத்தை படிக்கிறபோது ஒரு நந்தவனத்தின் முதற்சிரிப்பை முழுக்கவே பார்ப்பது போல் அல்லவா இருக்கிறது?
ஆகவேதான் எப்போதும் கடிதம் எழுத வேண்டும்" என்று அன்றே எழுதி வைத்திருக்கிறார் வார்த்தை சித்தர் வலம்புரிஜான்.












Click it and Unblock the Notifications