Vande Bharat: ஸ்டார் ஹோட்டல் தோத்துடும்.. பெங்களூர் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்! எப்படி இருக்கு பாருங்க.. வீடியோ
சென்னை: வந்தே பாரத் ஸ்லீப்பர் (Vande Bharat) ரயிலின் உட்புற டிசைன்கள் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி பயணிகளை பிரமிக்க வைத்துள்ளது. இதன் முதல் வகுப்பு ஏசி பெட்டி சொகுசு ஹோட்டல் போல் உள்ளது. சொகுசு விமான பயண அனுபவத்தை ரயில் பயணத்தில் வழங்கும் வகையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் புதிய பெட்டிகள் உள்ளன. மேம்படுத்தப்பட்ட கழிவறைகள், டிஜிட்டல் தகவல் பலகைகள், சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளன.
வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. தற்போது இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் 100 க்கும் மேற்பட்டவை இயக்கப்பட்டு வருகின்றன. ஹவ்ரா -காமாக்யா இடையே ஒரு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், மும்பை - பெங்களூர் வழித்தடத்தில் விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட உள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
இரு முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ரயிலின் உட்புற டிசைன்கள் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி பயணிகளை பிரமிக்க வைத்துள்ளது. இதன் முதல் வகுப்பு ஏசி பெட்டி சொகுசு ஹோட்டல் போல் உள்ளது. கண்கவர் உட்புற வடிவமைப்பு, பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது. பாஜக தனது எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும், இதை "தண்டவாளத்தில் ஓடும் சொகுசு ஹோட்டல்" என்று வர்ணித்தனர்.
சொகுசு ஓட்டலுக்கு நிகரான வசதிகள்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள், நீண்ட பயணங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு ஏசி பெட்டியில் தனித்தனி அறைகள் உள்ளன. இவை பயணிகளின் வசதிக்காக பிரத்தியேகமாய் உருவாக்கப்பட்டன. இந்த அறைகள் சொகுசு ஹோட்டலுக்கு நிகரான வசதிகளுன் உள்ளன. மேம்படுத்தப்பட்ட விளக்குகள், உயர்தர டிசைன், நேர்த்தியான கட்டமைப்பு, போதுமான இடவசதி இதில் அமைந்துள்ளது.
வழக்கமான ஏசி பெட்டியை விட முற்றிலும் புதுமையான டிசைனுடன் உள்ளது. 12 முதல் 16 பெட்டிகள் வரை இருக்கும். முதல் வகுப்பு ஏசி பிரிவில் மேம்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. நீண்ட தூரப் பயணங்களில் பயணிகள் வீட்டில் தூங்குவது போன்ற சூழலை இது அளிக்கும் வகையில் உள்ளது. மேம்படுத்தப்பட்ட கழிவறைகள், டிஜிட்டல் தகவல் பலகைகள், சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளன.
மும்பை - பெங்களூர் வழித்தடத்தில்
இந்தியாவின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பை மற்றும் டெக் சிட்டி என்று அழைக்கப்படும் பெங்களூரை இணைக்கும் ரூட் என்பதால், இந்த ரூட் எப்போதும் பரபரப்பாக காணப்படும். வணிகர்கள், தொழில் வல்லுநர்கள் இதை விரும்புவர். மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் என பல்வேறு தரப்பினரும் இந்த இரு நகரங்களுக்கு இடையே அதிக எண்ணிக்கையில் பயணிக்கிறார்கள். இந்த பயணிகளுக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.
நெட்டிசன்கள் கருத்து
மும்பை - பெங்களூர் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் உட்புற வடிவமைப்புகள் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் வியந்து பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், இதே அளவு தரம் தொடர்ந்து பராமரிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், பயணிகளும் கொஞ்சம் பொறுப்புடன் செயல்பட்டால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் நட்சத்திர ஹோட்டல் போலவே தொடர்ந்து பராமரிக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல, மற்றொரு நெட்டிசன் கூறுகையில், தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை வழியாக கன்னியாகுமரி அல்லது திருவனந்தபுரத்திற்கு இரவு நேரத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்கினால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளனர்.














Click it and Unblock the Notifications