அதிமுக அணியில் 5+1..? மத்திய அமைச்சர் பதவிக்கு பாஜக ரெடி.. ஆளூர் ஷா நவாஸ் உடைத்த உண்மை!
சென்னை: அதிமுக தரப்பிலிருந்து விசிகவுக்கு அழைப்பு வந்தது உண்மைதான் என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளார்.
திமுக அணியில் விசிகவுக்கு சீட்டு ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் இதுவரை திமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.

இதனால், இந்தக் கூட்டணி குறித்து பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. திமுக அணியில் உள்ள விசிகவை அதிமுக தன் பக்கம் இழுக்கத் திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் அடிப்பட்டு வருகிறது.
அதற்குப் பதிலளிக்க முன்வந்த திருமாவளவன், "அதிமுக தனது கூட்டணியில் ஏற்கெனவே இருந்த கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில் காட்டும் அக்கறையைவிட, அந்த அணியில் இல்லாத பிற கட்சிகளை இழுக்கக் காட்டும் அக்கறை அதிகமாக உள்ளது.
அங்குதான் சந்தேகம் எழுகிறது. அவர்கள் பாஜக அணியை விட்டு வந்ததற்கு என்ன காரணம் என்று இப்போதுதான் புரிகிறது. இது யார் கொடுத்த அஜெண்டா? என்று சந்தேகம் எழுகிறது" என்று பேசி இருந்தார்.

ஆனால், இதற்கு மாறாக அதிமுக எங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க அழைப்பு விடுத்தது உண்மைதான் என்று ஓபன் டாக் கொடுத்துள்ளார் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்.
ஒரு வலையொளிக்கு அளித்துள்ள பேட்டியில் ஆளூர் ஷாநவாஸ், "கடந்த 3 தேர்தல்களை நாங்கள் திமுக அணியுடன் சேர்ந்து சந்தித்துள்ளோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தல், அடுத்து சட்டமன்றத் தேர்தல். மீண்டும் உள்ளாட்சித் தேர்தல்.
இப்போது மறுபடியும் 2024 மக்களவைத் தேர்தலையும் சந்திக்க இருக்கிறோம். இது ஒரு கொள்கைக் கூட்டணி. அதுதான் எங்கள் தலைவர் அழுத்திச் சொல்லி வருகிறார்.

ஆனால், எதிர் அணியில் பாருங்கள். என்ன நடக்கிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணி பேசுகிறது. அதே பாமக இந்தப் பக்கம் பாஜகவுடனும் கூட்டணி பேசுகிறது. இந்த இரண்டும் இல்லாமல் திமுகவுடனும் மறுபக்கம் மறைமுகமாகப் பேச்சு நடத்துகிறது. இதே போலத்தான் தேமுதிக.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான கட்சிகளின் நிலைப்பாடு இதுதான். நாங்கள் மட்டும்தான் தொடர்ந்து திமுக அணியில் இருக்கிறோம். அந்தக் கூட்டணியுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துகிறோம்" என்றவரிடம் அதிமுக அணியில் 5 சீட்டு ஒரு ராஜ்ய சபா தருவதாக ஒரு பேச்சுவார்த்தை மறைமுகமாக நடப்பதாகச் சொல்லப்படுகிறதே? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு அவர், "நாங்கள் பேசவில்லை. வேண்டுமானால் அதிமுகவினர் பேசுகிறார்கள் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் போய் பேசவில்லை. நாங்கள் திமுக அணியில்தான் இருக்கிறோம். எங்களிடம் வந்து அதிமுக தரப்பு பேசுகிறது என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு தேர்தல் என்று வந்தால் பேசத்தான் செய்வார்கள். நாங்கள் போய் பேசினால்தான் அது தவறு. பாஜக கூடத்தான் எங்கள் தலைவரிடம் பேசினார்கள். ஒன்றிய அமைச்சராக்கலாம் என்று அழைப்பு விடுத்தார்கள். ஒன்றிய அமைச்சரைவிட மேலான பதவி என்னவோ, அதைக்கூடத் தருவதற்கு பிஜேபி தயாராக இருக்கிறது. எவ்வளவோ லாபி செய்தும் பார்த்தார்கள்.
பாஜக தலைவர்கள் சில எங்கள் தலைவருடன் நட்பு ரீதியில் நெருக்கமாகத்தான் இருக்கிறார்கள். கொள்கை ரீதியில் மிகப்பெரிய விரிசல் இருக்கிறது.
இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், பிஜேபி தான் வந்து விசிகவிடம் பேசுகிறது. நாங்கள் போய் பாஜகவிடம் பேசவில்லை. அதிமுக வந்து விசிகவிடம் பேசத்தான் செய்யும். நாங்கள் போய் பேசவில்லை. நாங்கள் கதவையும் திறந்து வைக்கவில்லை. ஜன்னலையும் திறந்து வைக்கவில்லை. எங்கள் தலைவரின் அணுகுமுறை அதுவல்ல.

நாங்கள் திமுக அணியில் இருக்கிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறோம். எந்த ஒரு வளரும் கட்சியும் அப்படி அறிவிக்க முன்வர மாட்டார்கள்.
எங்கள் வலிமை எங்களுக்குத் தெரிகிறது. அதனைக் கொண்டு எங்களுக்கான சீட்டை வலியுறுத்திப் பெற நினைக்கிறோம். நாங்கள் பலமான கட்சியாக உள்ளோம் என்பதைக் கூட்டணிக் கட்சிகளும் உணர்கின்றன.
நாங்கள் சமீபத்தில் நடத்திய மாநாடு அதற்குச் சாட்சி. எங்கள் வலிமையை உணர்ந்து சீட்டு கேட்பதில் என்ன தவறு? அப்படித்தானே எல்லா கட்சியும் கேட்கும்?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போய் கையெழுத்துப் போட்டு ஒப்பந்தம் செய்துவிட்டதா? இல்லையே? அவர்கள் பேச்சுவார்த்தையில்தானே உள்ளனர். கமல் அரசியலுக்குப் புதுமுகம். அவர் ஒரு தேர்தலைத்தான் சந்தித்துள்ளார்.
ஆனால், அவர் திமுக கூட்டணியில் இடம்பெறப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றுதான் தகவல் வருகிறது.
திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் கொடுத்தார்கள். அதில் நாங்கள் தனி சின்னத்தில் நின்று 4 தொகுதிகளில் வெற்றிபெற்றுக் காட்டியுள்ளோம். எங்கள் வலிமை நிரூபிக்கப்பட்டுள்ளது இல்லையா?

திமுகவுக்குத்தான் பொறுப்பு அதிகம் உள்ளது. அவர்கள் கூட்டணியில் உள்ள கட்சியைச் சமமாக நடத்த வேண்டும். அதே நேரம் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். அவர்கள் இன்று தேசிய அளவில் முக்கியமான கட்சியாக உள்ளனர். ஆகவே அதிக இடங்களில் நிற்க விரும்புவார்கள். ஆளும் கட்சியாகவும் இருப்பதால் அவர்களின் கருத்தும் சரிதான்.
ஆக, விசிக அதிக இடங்களைக் கேட்கவில்லை. அதன் வலிமையை உணர்ந்து கேட்கிறது. அதைத் தவறு என்று திமுக எடுத்துக்கொள்ளாது" என்கிறார்













Click it and Unblock the Notifications