அதிமுக எங்களுடன் இணையலாம்.. திடீரென அழைப்பு விடுத்த திருமாவளவன்.. முறிகிறதா திமுக கூட்டணி?
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பயணித்து வரும் திருமாவளவன் கூறியிருப்பது தமிழக அரசியல் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்து வருகிறது. இந்நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு திடீரென்று அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக திருமாவளவன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:
இந்தியா முழுவதும் தேசிய மதுவிலக்கு கொள்கையை அறிவிக்க வேண்டும். மதுவிலக்கு கொள்கையால் ஏற்படும் நிதி இழப்பை சரிசெய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக அரசு விடுதலை சிறுத்தைகள் கட்சி வைக்கும் கோரிக்கை என்னவென்றால் மதுக்கடைகளை முற்றிலுமாக மூட கால அட்டவணையை அறிவிக்க வேண்டும்.
மனித வளத்தை முற்றிலுமாக பாதிக்ககூடிய மதுவை அரசே விற்பனை செய்வது என்பது இந்த தேசத்துக்கு விரோதமான செயல். 2016 தேர்தல் அறிக்கையில் கூறிய கொள்கையை உயிர்ப்பிக்க வேண்டும். முழு மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்தகூடிய செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டும்.
திமுகவுக்கு மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு. அதிமுகவுக்கும் உடன்பாடு உண்டு. அனைத்து கட்சிகளுகே மதுவிலக்கை சொல்லும்போது மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்.
மதுவிலக்கு கொண்டு வருவது தொடர்பாக தமிழகத்தில் தயக்கம் உள்ளது. அதிமுகவும், திமுகவும் இதில் தயக்கம் காட்டுகிறது. தயக்கம் உள்ளவர்கள் அனைவரும் மாநாட்டுக்கு வரலாம். அதிமுக கூட வந்து பங்கேற்கலாம். அதிமுக கூட வரலாம். அனைத்து கட்சிகளும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை உள்ளது.
இது தேர்தலுக்கானது அல்ல. இதனை தேர்தலுடன் சம்பந்தப்படுத்த வேண்டாம். எங்களை பொறுத்தவரை தேர்தல் கூட்டணி, தேர்தல் அரசியல் என்பது முற்றிலும் வேறுபட்டது. மக்களின் பிரச்சனைக்காக மதவாத, சாதியவாத சக்திகளை தவிர்த்து எந்த சக்தியுடனும் இணைவோம். சாதிய போதை என்பது மதுபோதையை விட மோசமானது. மதபோதை என்பது கோகைனை விட மோசமானது.
இதனால் இந்த விஷயத்தில் கூட சாதிவாத, மதவாதிகளுடன் எங்களால் இணைய முடியாது.
இதை தேர்தல் அரசியலுடன் பொருத்த வேண்டாம். தேர்தல் நிலைப்பாடு என்பது வேறுபட்டது. அதனை இதோடு சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம். தேர்தல் நேரத்தில் நாங்கள் எடுக்கும் முடிவு என்பது முற்றிலும் வேறுபாடாக இருக்கும். இதற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை'' என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்ப விடுத்தாலும் கூட அதனை தேர்தலுடன் ஒப்பிட வேண்டாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். இருப்பினும் கூட அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கும் திருமாவளவனின் இந்த பேச்சு என்பது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு தற்போது ஆளும் கட்சியாக தமிழகத்தில் திமுக தான் உள்ளது.
இதனால் இந்த மாநாடு மூலம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வரும் வகையில் திமுகவுக்கு தான் அழுத்தம் கொடுக்கப்பட உள்ளது. இதனால் திருமாவளவனின் நிலைப்பாடு என்பது மாறி விட்டதா? அவர் அதிமுகவுடன் கைகோர்க்க தயாராகிவிட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications