முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் நாளை சந்திப்பு.. பரபரப்பு பேச்சுக்கு நடுவே திடீர் மீட்டிங்
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினை நாளை தொல் திருமாவளவன் சந்திக்க உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சையான நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஆளும் திமுகவுடன் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக இரண்டிலும் வெற்றி பெற்றது. திருமாவளவன் எம்பியாக உள்ளார். தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே மெல்ல மெல்ல சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில் பாஜக, பாமக தவிர இதர கட்சிகள் வரலாம் என பேசியிருந்தார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டே மது ஒழிப்பு மாநாடு நடத்த இருப்பதும், அதிமுகவுக்கு அழைப்பு விடுத்ததும் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றது.
இத்தகைய பரபரப்புக்கு நடுவே 'ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும்' என்று திருமாவளவன் பேசிய வீடியோ அவரது 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டது. அந்த வீடியோவில் திருமாவளவன், ‛‛தமிழ்நாட்டில் இதற்கு முன்பு யாரும் கூட்டணி ஆட்சியில் குரலை உயர்த்தினார்களோ இல்லையோ, 2016ல் கூட்டணி ஆட்சியில் குரலை உயர்த்திய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்டோம்.
இருந்த கட்சிகளெல்லாம் இப்படி பேசினார்களா என்று தெரியவில்லை. கேபினட்டில் இடம் வேண்டும் என்பது பவர் ஷேர். கூட்டணியில் இடம் வேண்டும் என்பது சீட் ஷேர். பவர் ஷேர் என்பது எனக்கும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது" எனப் பேசியிருந்தார். இந்த வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளானது. இதையடுத்து சற்று நேரத்தில் வீடியோ டெலிட் ஆனது. பிறகு மீண்டும் பதிவிடப்பட்டு அதுவும் டெலிட் செய்யப்ப்பட்டது.
இது குறித்து திருமாவளவனிடம் கேட்ட போது அட்மினிடம் தான் கேக்க வேண்டும்.. என்று கூறியிருந்தார். பிறகு நேற்று மாலை திருமாவளவன் பேசிய முழு வீடியோவும் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது. இதனால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற திருமாவளவன் துணிந்து விட்டாரா?... அதிமுக அல்லது விஜயின் தவெக கட்சிகளுடன் இணைய ஆயத்தமாகி வருகிறாரா? என்றெல்லாம் கூட அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.
இத்தகைய பரபரப்புக்கு நடுவே முதல்வர் மு.க ஸ்டாலினை விசிக தலைவர் தொல் திருமாவளவன் நாளை சந்தித்து பேசுகிறார். நாளை காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. சமீபத்திய பரபரப்புக்கு இடையே தொல் திருமாவளவன் முதல்வரை சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications