பட்டியல் சமூக ஆணையங்கள் என்ன செய்யுது? ஏன் வேங்கைவயலுக்கு செல்லவில்லை? - திருமாவளவன் சுளீர் கேள்வி
சென்னை: குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் பட்டியல் சமூகத்தினருக்கான ஆணையங்கள் ஏன் இன்னும் வேங்கைவயலுக்கு செல்லவில்லை? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்ப.பி கேள்வியெழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் பகுதியையொட்டி அமைந்திருக்கிறது வேங்கைவயல் கிராமம். இந்த கிராமத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இக்கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் குடிநீரில் மாசு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினர்.
இதனையடுத்து கிராமத்தினர் குடிநீர் தொட்டியை ஏறி பார்த்தபோது பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது குடிநீரில் மனித மலம் கலக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழித்துள்ளனர். இதனையடுத்து சம்பவத்தன்று மாலை கந்தர்வக்கோட்டை சிபிஎம் எம்எல்ஏ சின்னதுரை அரசு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து புகார் அளித்தார். இதன் பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குடிநீர் தொட்டியில் மலம்.. புதுக்கோட்டை சாதி வெறியர்களை கைது செய்யாதது ஏன்? ஹென்றி திபேன் கேள்வி
ஆய்வு
இந்த நடவடிக்கைக்கு அடுத்தே விஷயம் வெளியில் தெரிய வந்தது. இதற்கு அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் சம்பவம் உண்மை என்று தெரிய வந்ததது. இதர குறைகளை விசாரித்தபோது ஊருக்குள் இருக்கும் கோயிலுக்குள் நுழைய தங்களை அனுமதிப்பதில்லையென்று கிராமத்தினர் புகார் கூறியுள்ளனர். இதனையடுத்து, அம்மக்களை ஆட்சியர் கவிதா ராமு கையோடு அழைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட கோயிலுக்கு நேராக சென்றார். பின்னர் கோயிலை திறக்க சொல்லி மக்களை வழிபட வைத்தார்.
வழக்கு
ஆனால் இதற்கும் சில சிக்கல்கள் மேலெழுந்துள்ளன. அதாவது கோயிலை திறந்து தலித் மக்களை வழிபட வைத்தபோது கோயில் பூசாரியின் மனைவி சாமியாடியுள்ளார். அப்போது தலித் மக்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனையடுத்து அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல ஊரில் இரட்டை குவளை முறையை பயன்படுத்தியது என மொத்தமாக 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மறுபுறம் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரிக்க ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.
முதலமைச்சர் விளக்கம்
இதுவரை 85 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி முடித்த பின்னரும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. காவல்துறையினரின் விசாரணை ஒரு பக்கம் இருக்க தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவினர் வேங்கைவயலில் நேரில் ஆய்வு இறங்கினர். தொடர் விசாரணை, ஆய்வு என காவல்துறையினரும், தமிழ்நாடு அரசின் குழும் களம் இறங்கியுள்ள நிலையில் சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார். அதில் உண்மையான குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.
சிபிசிஐடி விசாரணை
இதனையடுத்து வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விசிக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை போராட்டத்தில் பங்கேற்றிருந்த எம்பி திருமாவளவன் பேசியதாவது, "மனிதன் நினைத்து பார்க்கவே கூடாத ஒன்று வேங்கைவயல் கிராமத்தில் அரங்கேறியுள்ளது. இதனை மனிதாபிமானம் உள்ள எவராலும் பொறுத்துக்கொள்ள முடியாது. உணவில், குடிநீரில் மனித எச்சம் கலக்கப்பட்டிருக்கிறது என்பதை கேள்விப்படும் போதே உடல் கூசுகிறது. நேற்று சேகுவேராவின் மகள் சென்னை வந்திருந்தார். அந்த நிகழ்வில் நான் பங்கெடுத்திருந்தபோது சேகுவேரா இன்று உயிரோடு இருந்திருந்தால் வேங்கைவயல் கிராமத்தின் பிரச்னைக்காக நிச்சயம் குரல் கொடுத்திருப்பார் என்று கூறியிருந்தேன். ஏனெனில், எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ அதை எதிர்த்து யாரெல்லாம் கேள்வி கேட்கிறார்களோ அவர்கள் அனைவரும் தோழர்களே என்று அவர் கூறியிருந்தார்.
ஆணையம்
பொதுவாக காவல்துறையில் புகார் அளித்தால் காவல்துறையினர் உடனடியாக புகாரை ஏற்றுக்கொள்வதில்லை. அதிலும் குறிப்பாக தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் புகார் அளித்தால் அதனை காவல்துறையினர் ஏற்பதே இல்லை. அதிலும் சில காவல்துறை அதிகாரிகள் புகார் அளிக்கச் சென்ற மக்கள் மீதே வழக்குப்பதிவு செய்துவிடுகின்றனர். இவையாவும் நீண்டகாலமாக இருக்கும் பிரச்னைகள். இச்சூழலில்தான் வேங்கைவயல் சம்பவம் நடந்திருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பின்னர் தற்போது வேங்கைவயல் கிராமத்துக்கு தேசிய, மாநில பட்டியல் சமூகத்தினருக்கான ஆணையங்கள் இரண்டும் இன்னும் செல்லவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
இரட்டை குவளை
மனித உரிமைகள் அணையமும் அங்கு செல்லவில்லை. இந்த அநாகரீகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும். தீண்டாமைக்கு எதிராக சிறப்புப் படைப் பிரிவை உருவாக்க வேண்டும். இரட்டை குவளை முறை தமிழ்நாடு முழுவதிலும் உள்ளது. இரட்டை குவளை போல் இரட்டை தண்ணீர் தொட்டி, இரட்டை சுடுகாடு போன்றவையும் தவறானது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இரட்டை குவளை முறையை ஒழிக்க வேண்டும். இவைகள் யாகும் தமிழ்நாட்டின் அவமானங்கள். இந்திய அளவில் ஜாதி தீண்டாமை உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் 10 இடங்களில் உள்ளது" என்று கூறியுள்ளார்.