'நயவஞ்சகம்'.. 'அச்சுறுத்தல்'.. இதுதானே உங்கள் பாணி.. பாஜகவை தாக்கிய வி.சி.க வன்னி அரசு!
சென்னை: மதுரையை சேர்ந்த பா.ஜ.க. ஆதரவாளர் மாரிதாஸ். பிரபல யூடியூபருமான இவர் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்துடன் காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதன்பின்னர் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மாரிதாஸ் போர்ஜரி செய்து மோசடியாக மெயில் ஒன்றை வெளியிட்டதாக புகார் கூறி இருந்ததன் பேரிலும் சிறையில் வைத்து மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அண்ணாமலை கண்டனம்
மாரிதாஸ் கைதுக்கு தமிழக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதிலும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பொங்கியெழுந்து விட்டார். மாரிதாஸ் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர் தமிழக போலீசார் தங்கள் இஷ்டத்துக்கு செயல்படுகிறார்கள். தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு கட்டுப்பாட்டில் போலீசார் இல்லை. எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் கடுமையாக பேசினார் அண்ணாமலை.

ஆளுநருடன் சந்திப்பு
இத்துடன் விட்டுவிடாமல் மூத்த பாஜக தலைவர்களை அழைத்துக் கொண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியையும் அண்ணாமலை சென்று சந்தித்தார். அப்போது தமிழக அரசு பேச்சுரிமையை நசுக்குவதாக அவர் ஆளுநரிடம் புகார் கூறியதாக கூறப்படுகிறது. போலீசார் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் தெரிகிறது.

சேகர்பாபு கிண்டல்
இதனை தொடர்ந்து அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 'வெந்ததை தின்று விட்டு வாயில் வந்ததை பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு எல்லாம் பதில் கூற முடியாது' என்று தெரிவித்தார். இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு டுவிட்டரில் அண்ணாமலைக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

வன்னி அரசு கேள்வி
''17 மாநிலங்களில் ஆட்சி அமைத்திருப்பதாக பெருமைப்படுவது ஒருபக்கம் இருக்கட்டும். அத்தனை மாநிலங்களிலும் தனித்தா ஆட்சி அமைத்தீர்கள்? மாநிலக்கட்சிகளை நயவஞ்சகமாக ஏமாற்றி அச்சுறுத்தி தானே ஆட்சியை பிடித்திருக்கிறீர்கள். எந்த மாநிலத்தில் தனித்து தேர்தலில் பாஜக நின்றுள்ளது?'' என்று வன்னி அரசு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications