காய்கறி வாங்குற காசுல கறியே வாங்கிறலாம் போலயே! ராக்கெட் வேகத்தில் உயரும் விலை! பட்ஜெட்ல துண்டு தான்!
சென்னை: தொடர் கனமழை மற்றும் விரத காலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கோயம்பேடு காய்கறி சந்தையில் பீன்ஸ், பீட்ரூட், பெரிய வெங்காயம், கத்தரிக்காய், முருங்கைக்காய் உள்ளிட்டவற்றின் விலை 100 ரூபாயை எட்டி உள்ளது. சில காய்கறிகளின் விலை 100 ரூபாயை தாண்டி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறிகள் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் ஈரப்பதம் காரணமாக வெங்காயம் தக்காளி ஆகியவற்றின் விலை கணிசமாக அதிகரிக்கும்.

குறிப்பாக கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்பன் விரதம், முருகனுக்கு மாலை அணிவது, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிவது என விரத காலங்கள் அதிகமாக உள்ளது. இதனால் இறைச்சி நுகர்வு குறைந்து மக்கள் காய்கறிகளை அதிகளவில் பயன்படுத்துவார்கள்..
இதனால் இந்த காலங்களில் இறைச்சி விலை வெகுவாக குறையும். அதே நேரத்தில் காய்கறிகளின் விலை அதிகரிப்பதும் வழக்கம் தான். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 260 முதல் 250 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் தற்போது 200 ரூபாயாக குறைந்து இருக்கிறது. ஆட்டு இறைச்சி விலை 800 ரூபாயாகவும், மீன்களின் விலை 200 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. அதே நேரத்தில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
ஏற்கனவே வரத்து குறைவு காரணமாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போது வரத்து குறைவோடு. பக்தர்கள் விரதம் கடைபிடிக்கும் காலம் என்பதால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக பீன்ஸ் தற்போது ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பீட்ரூட் 90 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 90க்கும், கத்தரிக்காய் 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதிகபட்சமாக காய்கறிகளில் முருங்கைக்காய் 160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் கேரட் 100 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 75 ரூபாய்க்கும் ஒரு கிலோ இஞ்சி 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல் சின்ன வெங்காயம் 85 ரூபாய்க்கும், தக்காளி 70 ரூபாய்க்கும் பூண்டு 450 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

மேலும் கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விற்பனை விலையில் தான் இந்த விலையானது இருக்கிறது. இங்கு மொத்த விலையில் கிலோ கணக்கில் காய்கறிகளை தங்கள் கடைகளுக்கு வாங்கிச் செல்லும் வியாபாரிகள் சில்லறை விற்பனை விலையில் பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்கின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை 100 ரூபாயை தாண்டி இருக்கிறது. இதனால் பல காய்கறிகளின் விலை 100 ரூபாயை தாண்டியே விற்கிறது.
மேலும் வரும் காலங்களில் தொடர் மழை இருக்கும் என்பதாலும் விரத காலங்கள் தொடர்வதாலும் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் மக்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், காய்கறிகள் வாங்கும் பணத்தில் பாதியை செலவிட்டாலே இறைச்சி வாங்கி சாப்பிட்டு விடலாம் என்ற நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications