சென்னை + 3 மாவட்ட மக்களே.. மறந்தும் பைக், காரை வெளியே எடுத்து விடாதீர்கள்.. அரசு உத்தரவை பாருங்க
சென்னை: கொரொனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல், நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இது படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது 5வது கட்ட ஊரடங்கு காலத்தில் நாம் இருக்கிறோம்.
Recommended Video
ஜூன் 30ஆம் தேதிவரை ஐந்தாவது காலக்கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆனால் முதல் மூன்று ஊரடங்கு காலகட்டத்திலும் மிகக் கடுமையான கெடுபிடிகள் இருந்தன. நான்காவது கால கட்டத்தில் இருந்தது, ஊரடங்கு தளர்வுக்கு வந்தது.
நான்காவது கால கட்டத்தின் போது சிவப்பு மண்டல பகுதியாக இருந்தாலும் பரவாயில்லை, பாஸ் தேவையின்றி வாகனங்களில் பயணிக்கலாம் என்று தளர்வு கொடுக்கப்பட்டது.
உலக மகிழ்ச்சி தினம் 2020 - கொரொனா வைரஸ்க்கு மத்தியில் மகிழ்ச்சியோடு இருப்போம்
வாகனங்கள் பறிமுதல்
அதுவரை மூன்றாவது கட்ட லாக்டவுனின்போது, அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் இ பாஸ் பெற்று பயணிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
எனவே, வேறு தேவைகளுக்காக செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்குகள் பாய்ந்தன. மே 17 ஆம் தேதி மூன்றாவது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்தது. இதன் பிறகு மக்கள் தளர்வுகளை அனுபவிக்கத் தொடங்கினர்.
ஒரு மாதம்
இப்போது சுமார் ஒரு மாத காலம் ஆகிவிட்டது. ஆனால் ஜூன் 19ஆம் தேதி முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற தேவைகளுக்கு வாகனங்களை இயக்குவதற்கு அனுமதி கிடையாது.
மறந்து விடாதீர்கள்
வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் உள்ள கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும். அதை தாண்டி செல்ல கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கடைகளுக்கு செல்லும் போதும், வாகனங்களை எடுத்துச் செல்லக்கூடாது. எனவே மறந்து போய், பழைய படி வாகனங்களை எடுத்துச் சென்று விடாதீர்கள். அவ்வாறு சென்றால் உங்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப் படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இ பாஸ்
சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல மட்டுமே மேற்கண்ட நாட்களில் இனி இ பாஸ் கொடுக்கப்படும். இதற்கு, தகுந்த ஆவணங்களை இ பாஸ் வழங்கும் இணையதளத்தில் சமர்பிக்க வேண்டும். எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே இனி பாஸ் கிடைக்கும்.