வாகன ஓட்டிகளே அலர்ட்! சென்னையில் இப்படி உங்க கார்களை நிறுத்திடாதீங்க..ஆக்ஷனில் இறங்கிய மாநகராட்சி
சென்னை: போக்குவரத்துக்கு இடையூறாக நீண்ட நாட்களாக சாலைகள் மற்றும் பொது இடங்களில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்றாவிட்டால் ஏலத்தில் விடப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதே படாத பாடாக உள்ளது. சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் பல இடங்களில் சாலைகளிலேயே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து இருக்கக் கூடும். இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படும்.

இன்னும் சொல்லப்போனால், சென்னையில் பல இடங்களில் சாலையோரங்களில் கார்கள் மற்றும் பைக்குகள் கேட்பாரற்று நாள் கணக்கில் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதையும் காண முடிகிறது. தூசு படித்து அழுக்குடன் நிற்கும் இந்த வாகனங்களினால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதனால், இனி இதுபோன்று நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி ஏலத்தில் விடப்போவதாக சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- மாநகராட்சி பகுதிகளில் தெருவோரங்கள் மற்றும் சாலைகளில் கைவிடப்பட்ட வாகனங்கள் பொதுமக்களுக்கு பெரும் இடையூறும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட வழிவகுக்கிறது.
மேலும், அப்பகுதி குப்பைகளை கொட்டும் பகுதிகளாக உருவாவதால் சாலைகளை முறையாக சுத்தம் செய்ய இயலாத நிலையும் உள்ளது. இதனால், கைவிடப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அடையாளம் கண்டு அவற்றினை அகற்ற தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி 2023-24-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, முதல் கட்டமாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நீண்ட நாட்களாக சாலைகள் மற்றும் பொது இடங்களில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைக்குகள் மற்றும் ஆட்டோக்கள் , கார்கள் மற்றும் கனரக வாகனங்களை சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை காவல் அதிகாரிகளால் உடனடியாக அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் காரணமாக சாலையோரங்கள், நடைபாதைகள், தெருக்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் உரிமையாளர்கள், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கும் 15 நாட்களுக்குள் தாமாகவே முன்வந்து உடனடியாக வாகனங்களை எடுத்து செல்ல வேண்டும்.
வாகனத்தின் உரிமையாளர்கள் இதை செய்ய தவறும் பட்சத்தில், நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இந்த வாகனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவல் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மாநகராட்சியால் கண்டறியப்பட்டுள்ள பொது இடத்தில் நிற்கும் இந்த வாகனங்கள் கொண்டு செல்லப்படும். இந்த வாகனங்களின் விவரங்கள் சென்னை மாநகராட்சியின் வெப்சைட் மற்றும் செய்தித்தாளிலும் வெளியிடப்படும்.
வாகனத்தின் விவரங்களை சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் பார்வையிட்டு மாநகராட்சியின் மண்டல அலுவலர்களை 15 நாட்களுக்குள் அணுகி உரிய விவரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்திட வேண்டும். உரிமை எதுவும் கோரப்படாத வாகனங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு உரிய சட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி பொது ஏலத்தில் விடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications