தமிழக அரசும் -மத்திய அரசும் இதை செய்தாக வேண்டும்; வேறு வழியில்லை; வேல்முருகன் வேண்டுகோள்!
சென்னை: பயிர்காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் என்பதால் இதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை உடனடியாக நீடிக்க தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளது. மேலும், சம்பா நடவுக்கான 1000 ஏக்கர் நாற்றங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில், சம்பா பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கப்பட்ட நாள் நாளையுடன் முடிவடைகிறது. குறிப்பாக, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், சிவகங்கை, கடலுார், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில், சம்பா பயிரை காப்பீடு செய்வதற்கு நாளையுடன் நிறைவடைகிறது.
எனவே, தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீடிக்க தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இதனிடையே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பயிர்காப்பீடு செய்ய முடியாத சூழல் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பலருக்கும் இது குறித்த தகவலே தாமதமாகதான் தெரிய வந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications