வேல்முருகன் அரசியல் முடிவுக்கு வருகிறதா? பழைய தவாக கேஸை தூசு தட்டும் திமுக! காத்திருக்கும் ஆபத்து?
சென்னை: வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிட்டுள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்த கவலை தொற்றிக்கொண்டுள்ளது.. ஆளுங்கட்சியின் நிழலில் இருந்த 5 ஆண்டுகால நிம்மதிக்குப் பிறகு, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தங்களுக்குச் சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் விழுமோ என்கிற அச்சத்தில் அக்கட்சியின் சீனியர் நிர்வாகிகள் கலங்கிப் போயுள்ளனர்.. அதிமுகவினரை விடவும், திமுக வெற்றியை நினைத்துத் தற்போது வேல்முருகன் தரப்புதான் மிகுந்த பதற்றத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள் என்பது தேர்தலுக்குத் தேர்தல் நடக்கும் இயல்பான ஒன்றுதான். ஆனால், ஒரு கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு, அந்த முடிவே அக்கட்சியின் இருத்தலுக்கே கேள்விக் குறியாக மாறுமா என்பதைத் தீர்மானிப்பது தேர்தல் முடிவுகள்தான்.

வேல்முருகன் எடுத்த ரிஸ்க்
அந்த வகையில், நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும் அதன் தலைவர் வேல்முருகனுக்கும் மிகப்பெரிய அக்னிப்பரீட்சையாக உருவெடுத்துள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த வேல்முருகன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்றார். 5 ஆண்டுகள் ஆளுங்கட்சியின் நிழலில் பயணித்த அவருக்கு, இந்தத் தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக ஏற்பட்ட இழுபறி பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. திமுக ஒரு சீட் மட்டுமே ஒதுக்க முன்வந்த நிலையில், கவுரவம் பார்த்த வேல்முருகன் கடைசி நேரத்தில் கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறினார்.
சிறிய அமைப்புகளுடன் இணைந்து தனித்துப் போட்டியிட்ட வேல்முருகனின் இந்த அதிரடி முடிவு, தற்போது அவருக்கே வினையாக முடியுமோ என்கிற விவாதம் அரசியல் அரங்கில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சி
உண்மையில், தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விடவும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் சீனியர் நிர்வாகிகள்தான் அதிக மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது.
இதற்கு காரணம், தேர்தல் களத்தில் திமுகவினருக்கும் தவாகவினருக்கும் இடையே ஏற்பட்ட நேரடி மோதல்கள் தான். கடந்த காலங்களில் நண்பர்களாக இருந்த 2 தரப்பினரும், இந்தத் தேர்தலில் பல இடங்களில் நேருக்கு நேர் மல்லுக்கட்டியுள்ளனர். இந்த கசப்பான சம்பவங்கள், தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வேல்முருகன் தரப்பிற்கு சட்ட ரீதியான நெருக்கடிகள் அதிகரிக்கக்கூடும் என்ற யூகம் வலுவாக உள்ளது. குறிப்பாக, தவாக நிர்வாகிகள் மீது நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் மீண்டும் தூசு தட்டப்படலாம் என்கிற அச்சம் அக்கட்சியின் 2ம் கட்டத் தலைவர்களிடையே மேலோங்கியுள்ளதாம்.
கடந்த 5 ஆண்டுகளாக ஆளும் கூட்டணியில் இருந்ததால், காவல்துறை ரீதியான எந்த நெருக்கடியும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தனர். ஆனால், தற்போது உறவு முறிந்துவிட்ட நிலையில், ஆளுங்கட்சியின் அதிகார பலம் தங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என தவெகவினர் கலக்கத்தில் உள்ளனராம்.
பழைய கேஸை எடுக்குதா திமுக
ஒருவேளை திமுக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அரியணை ஏறினால், வேல்முருகனின் அரசியல் எதிர்காலம் முட்டுக்கட்டைக்கு உள்ளாகலாம் என்றும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்துள்ளனராம். அதுமட்டுமல்ல, தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவினருடன் மல்லுக்கட்டிய விவகாரங்கள் தவாக தரப்பை யோசிக்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. .
தனித்துப் போட்டியிட்டதன் மூலம் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள வேல்முருகன், எதிர்பார்த்த வாக்குகளைப் பெறத் தவறினால், அது திமுகவின் கரங்களை நிச்சயம் வலுப்படுத்தும்.
அதே நேரத்தில், திமுக ஆட்சிக்கு வராமல் போனால் மட்டுமே தங்களுக்குப் பாதுகாப்பு என தவாகவினர் கணக்கு போடுகிறார்கள்.. தமிழக அரசியலில் ஒரு சிறு கட்சியின் வெளியேற்றம், அந்த கட்சிக்கு சுதந்திரத்தைத் தருகிறதா அல்லது அதன் அரசியல் வாழ்வையே முடக்கப்போகிறதா என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும். வேல்முருகன் எடுத்த இந்த "ரிஸ்க்" அவருக்கு கைகொடுக்குமா அல்லது அரசியல் நெருக்கடியில் தள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications