Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன?
சென்னை: திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் (Tamilaga Vazhvurimai Katchi - TVK) தலைவர் தி.வேல்முருகன் இந்த முறை 10 தொகுதிகளை கேட்டு எந்தெந்த தொகுதி என்ற பட்டியலையும் அவர் கொடுத்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எப்போது காங்கிரஸ் கட்சி, திமுகவிடம் கூடுதல் தொகுதிகளையும் ஆட்சியில் பங்கு என்பதையும் கேட்டதோ அப்போது முதலே பிற கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகின்றன.

காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளை கேட்ட நிலையில் அக்கட்சிக்கு 28 தொகுதிகளை திமுக இறுதி செய்துள்ளது. இந்த நிலையில் மதிமுக 6 தொகுதிகளை கேட்டது. ஆனால் திமுகவோ 4 தொகுதிகளை மட்டுமே கொடுத்தது.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் இந்த முறை தலா 12 தொகுதிகளை கேட்டிருந்தன. ஆனால் இக்கட்சிகளுக்கு தலா 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என சொல்லப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகளை பொருத்தமட்டில் கடந்த முறை 6 இடங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டது. ஆனால் 8 இடங்கள் வரை திமுக கொடுக்கும் என சொல்லப்படுகிறது.
அது போல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறை 2 மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது. அது போல் ஐயூஎம்எல் கட்சிக்கும் கடந்த முறை 3 ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை 2 மட்டுமே ஒதுக்கப்படும் என தெரிகிறது.
மனித நேய மக்கள் கட்சி கடந்த முறை போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வென்றுள்ளதால் இந்த முறையும் அவர்களுக்கு 2 தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2 தொகுதிகளையும் தேமுதிகவுக்கு 6 தொகுதிகளையும் ஒதுக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
அது போல் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக பேரவை, தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை, கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, புதிய திராவிடக் கழகம், எஸ்டிபிஐ, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு சீட்டையும் திமுக ஒதுக்கும் என தெரிகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி கடந்த முறை ஒரே ஒரு தொகுதியில் போட்டியிட்டு வென்றது. இந்த முறை வேல்முருகன், தொகுதி மாற்றம் குறித்து கேட்பதுடன், 10 தொகுதிகளுக்கான பட்டியலையும் திமுகவிடம் கொடுத்தாராம்.
இதனால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு அதிர்ச்சி அடைந்துள்ளதாம். அதாவது வேல்முருகன் கடந்த முறை பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். ஆனால் இந்த முறை நெய்வேலி தொகுதியை கேட்டுள்ள வேல்முருகன், பாமகவின் பிளவை தனக்கு சாதகமாக்கி, வன்னியர்களின் வாக்குகளை பெற முயற்சிக்கிறாராம்.
இதனால் பாமகவுக்கு வலுவான வடமாவட்ட தொகுதிகளை ஒதுக்குமாறு வேல்முருகன் திமுகவிடம் கேட்டு 10 தொகுதிகளுக்கான பட்டியலையும் கொடுத்துள்ளார். இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் நெய்வேலி தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் சபா ராஜேந்திரனும் இந்த முறை அதே தொகுதியை பெற காய்களை நகர்த்தி வருகிறார்.
இப்படியிருக்க நெய்வேலியும் வேண்டும், 10 சீட்டும் வேண்டும் என வேல்முருகன் கேட்டதற்கு திமுக தலைமையோ, "விருப்பமான தொகுதி வேண்டும் என்றால் ஒன்றை பெற்றுக் கொள்ளுங்கள். நாங்களாக கொடுப்பதென்றால் 2 தொகுதிகள் கொடுக்கிறோம்" என கூறிவிட்டனராம். இதனால் வேல்முருகனின் பாமகவுக்கு மாற்று என்ற பிளான் உடைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications