Vijay NR Congress: மக்கள் சந்திப்பு கூட்டங்களை தடுக்க முடியாது! கபட நாடக திமுக! விஜய் விமர்சனம்
சென்னை: மக்கள் சந்திப்பு கூட்டங்களை திமுக தடுக்க பார்க்கிறது. புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயத்தை புதுவை மண்ணில் தொடங்கியுள்ளோம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மாநில மக்களுக்கு என் அன்பான வணக்கம்.
எல்லைகள் கடந்து, மொழியாலும் மனத்தாலும் எப்போதும் இணைந்திருக்கும் நாம், ஒரு புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயத்தை இன்று புதுச்சேரி மண்ணில் தொடங்கியிருக்கிறோம்.
நிலப் பரப்பிலும், நிர்வாகக் கட்டமைப்பிலும் சிறிய யூனியன் பிரதேசம் என்றாலும், கட்சி பேதமின்றி, வெறுப்புணர்வின்றி எதிர்க்கட்சியான நம் நிகழ்வுக்கு மிகப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்து நம் பாதுகாப்பிலும் பொதுமக்கள் பாதுகாப்பிலும் ஜனநாயக அரசியல் மாண்போடு புதுச்சேரி அரசு நடந்துகொண்டிருக்கிறது.
அந்த வகையில், புதுச்சேரி அரசுக்கும் முதல்வர் அவர்களுக்கும் உள்துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் புதுச்சேரி மாநிலக் காவல் துறைக்கும் நமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எழுச்சி மிக்க நம் இளைஞர் படையினரும் கட்டுக்கோப்பும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை அவதூறாளர்களுக்குப் புரிய வைத்துள்ளார்கள்.
அதிகாரத்தை வைத்துக்கொண்டு, சட்டத்தை வளைத்து, சூழ்ச்சிகள் உட்பட என்னென்னவோ திட்டம் போட்டு நம் அரசியல் பயணத்தை, மக்கள் சந்திப்பை, பிரசார முன்னெடுப்புகளை இந்தக் கபட நாடகத் தி.மு.க. அரசு தடுக்கப் பார்த்தாலும், முடக்க முயன்றாலும், அது அணுவளவும் நடக்காது.
கழகத்தின் எதிர்பார்ப்பை, வேண்டுகோள்களை, உத்தரவுகளை மனதார மதித்து, நிகழ்வை வெகு வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த, அதற்குக் காரணமாயிருந்த தமிழகம், புதுச்சேரி மக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி!
வென்று காட்டுவோம்!
வாகை சூடுவோம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.புதுவை உப்பளம் துறைமுக மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பேசுவதற்கான பொதுக் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே வந்துவிட்ட விஜய், சரியாக 11.30 மணிக்கு பேசத் தொடங்கினார்.
அவர் தொடர்கையில், "என் நெஞ்சில் குடியிருக்கும்.. புதுவை மக்கள் அனைவருக்கும் வணக்கம். தனித்தனி இல்லை மத்திய அரசுக்குத்தான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம். புதுவை ஒரு தனி யூனியன் பிரதேசம். அவங்களுக்குத்தான் தமிழகம் தனி, புதுவை தனி. ஆனால் நாம் வேறு வேறு கிடையாது. நாம் அனைவரும் சொந்தம்தான்.
தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுவை மட்டுமில்லை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நம் வகையறா. எல்லாம் நம் உறவுதான். பாரதி இருந்த மண், பாரதிதாசன் பிறந்த மண். 1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் தமிழகத்தில் ஆட்சி அமைத்தார்.
ஆனால் 1974 ஆம் ஆண்டு புதுவையில் அவரது ஆட்சி அமைந்தது. தமிழகத்தில் அவரை மிஸ் செய்யாதீங்கன்னு எச்சரித்ததே புதுவைதான். தமிழகம் மாதிரியே புதுவை மக்கள் என்னை 30 ஆண்டுகளாக தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய் தமிழகத்திற்கு மட்டும்தான் குரல் கொடுப்பான் என நினைக்காதீர்கள். புதுவைக்கும் சேர்த்துதான் குரல் கொடுப்பான். அது எனது கடமையும் கூட! தமிழகத்தில் உள்ள திமுக அரசு மாதிரி புதுவை அரசு கிடையாது.
வேறு கட்சி நடத்தும் அரசியல் நிகழ்வு என்றாலும் பாதுகாப்பு அளிக்கிறார்கள். புதுவை அரசுக்கும் புதுவை சிஎம் சாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதை பார்த்தாவது தமிழகத்தில் உள்ள திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் கற்றுக் கொள்ள மாட்டார்கள். தேர்தலில் மக்கள் கற்றுக் கொடுப்பார்கள் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications