மனசாட்சியுள்ள மக்களாட்சி அமைய! "உங்கள் விஜய் நா வரேன்" திருச்சியில் நாளை சந்திப்போம்! தவெக விஜய்!
சென்னை: வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, உங்கள் விஜய் நா வரேன் என தவெக தலைவரும் நடிகருமான விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நாளை முதல் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கும் அவர், வாரந்தோறும் ஓரிரு மாவட்டங்கள் என தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம்! பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றி வரும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர். தங்களுக்கென்றே உண்மையான தோழமை மற்றும் பாரபட்சமற்ற தன்மையுடன் கூடிய ஓர் அரசு அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றன.

மக்களின் மனமறிந்து அரசியல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம், மக்களுக்காக "மனசாட்சி உள்ள மக்களாட்சியை" அமைக்கும் உன்னத லட்சிய நோக்குடன் களமாடி வருகிறது. மக்களுடன் இணைந்து நிற்கும் "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, உங்கள் விஜய் நா வரேன்" என்கிற நமது பயணம்தான் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்பு பயணம்.
நாளை 13 ஆம் தேதி காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே தொடங்கி அடுத்தடுத்து நமது மதுரை மாநாட்டில் சொன்னது போலவே என் குடும்ப உறவுகளாகிய உங்களைச் சந்திக்க, உங்களுக்காகவே குரல் கொடுக்க உங்கள் விஜய், நம் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவலர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில், "மக்களிடம் செல்" என்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் ஆணையை மானசீகமாக ஏற்று, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருகிறேன்.
ஓர் அரசியல் கட்சியின் தலைவராக நம் ஜனநாயக முறையில் மக்களைச் சந்திக்க விழைகிறோம். இந்த நிலையில் தமிழ்நாடு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில், எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை நம் கழகத்தின் மீது மட்டும் காவல் துறை விதித்துள்ளது.
இப்படி பாதுகாப்பு சார்ந்த நமது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து தார்மீகக் கடமையோடு நமது கழகத் தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதை இந்த அரசும் காவல் துறையை வழிநடத்தும் தமிழ்நாட்டு முதல்வரும் உறுதி செய்ய வேண்டும்.
கழகத் தோழர்களாகிய நீங்களும் நமது பொதுமக்கள் சந்திப்பிற்கு ஏதுவாக, அந்தந்த மாவட்டங்களில் பங்கு பெற்றும் சமூகவலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டும், ஏற்கெனவே பொதுமக்களுக்கு இடையூறின்றி மக்கள் சந்திப்புகளை நடத்த நாம் தேர்ந்தெடுத்துள்ள நாட்களில் அவர்களைச் சந்திக்க ஏதுவாக பாதுகாவலர்கள். தன்னார்வலர்கள் மற்றும் காவல் துறைக்கு உறுதுணையாகக் காவல்துறை அளித்த வழிமுறைகளைக் கடமை, கண்மியம் மற்றும் ராணுவக் கட்டுப்பாடுடன் பின்பற்றி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இறைவன் அருளால், இயற்கையின் துணையால் உங்கள் அனைவரின் பேரன்பால் நம்முடைய இந்த மக்கள் சந்திப்புப் பயணம் மகத்தான வெற்றி பெறும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் "உங்கள் விஜய் நான் வரேன்"
நல்லதே நடக்கும்
வெற்றி நிச்சயம்
தோழமையுடன் விஜய் என குறிப்பிட்டுள்ளார்.
நாளை 13 ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அதன் பிறகு வரும் 20ஆம் தேதி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அக்டோபர் 4ஆம் தேதி, அக்டோபர் 5ஆம் தேதியும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அது போல் அக்டோபர் 11 ஆம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், அக்.25 ஆம் தேதி தென் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் விஜய் பரப்புரை நடத்துகிறார்.
அது போல் நவம்பர் 1 ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூரி மாவட்டங்களிலும் நவம்பர் 8 ஆம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் நவம்பர் 15 ஆம் தேதி தென்காசி, விருதுநகர், நவம்பர் 22 ஆம் தேதி கடலூர் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் நடைபெறுகிறது.
நவம்பர் 29ஆம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் டிசம்பர் 6ஆம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் டிசம்பர் 13 ஆம் தேதி சேலம், நாமக்கல் , கரூர் மாவட்டங்களிலும் டிசம்பர் 20ஆம் தேதி திண்டுக்கல், தேனி, மதுரையிலும் சுற்றுப்பயணத்தை முடிக்கிறார் விஜய்.












Click it and Unblock the Notifications