அம்பேத்கர் மேடையில் நாங்குனேரி மாணவன் சின்னத்துரை! வேங்கை வயல் மேட்டரையும் விடாத தவெக தலைவர் விஜய்!
சென்னை: சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் கலந்து கொண்டார். இந்த நிலையில் நெல்லையில் சாதிய தாக்குதலுக்கு ஆளான மாணவர் நாங்குநேரி சின்னதுரைக்கு பொன்னாடை போர்த்தி அம்பேத்கர் புத்தகத்தை பரிசளித்தார் நடிகரும் தவெக தலைவருமான விஜய். மேலும் வேங்கைவயல் சம்பவத்தை பொதுவெளியில் கொண்டு வந்தவர்களுக்கும் அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வழங்கினார்.
'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் விகடன் குழும நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளரும், நூலை உருவாக்கியவருமான ஆதவ் அர்ஜுனா, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பேரனான ஆனந்த் டெல்டுண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பறை இசை கலைஞர்களுடன் பறை இசைத்து மகிழ்ந்த விஜய், தொடர்ந்து அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை உடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில் கருத்தியல் தலைவராக விஜய் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாகவும் அவர் களத்திற்கு வர வேண்டும் என கூறினார் மேலும் 2021 தமிழகத்தில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் நான்குநேரி சாதிய வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் சின்னத்துரை புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு மேடையில் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த விஜய் அம்பேத்கர் புத்தகத்தை பரிசளித்தார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய், தமிழகத்தில் பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போதும் சின்னத்துரை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி நடந்த அரங்குக்கு வந்த விஜய், மாணவன் சின்னத்துரையின் அருகில் சென்று அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
சின்னத்துரை பின்னணி: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை அங்குள்ள அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி மாணவர்களுக்கிடையே சாதிவெறி ஊறிப் போய் இருந்த நிலையில் அவர் ஒரு வாரம் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதை அடுத்து அவரது பெற்றோரை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகத்தினர் மாணவனை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து பள்ளிக்குச் சென்ற சின்னதுரையிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்திய போது பள்ளி மாணவர்கள் சிலர் தன்னை சாதி ரீதியாக தாக்குவதாக கூறியுள்ளார். மேலும் குறிப்பிட்ட மாணவர்களின் விவரங்களையும் அவர் ஆசிரியர்களிடம் கூறியிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் ஏன் தங்களை பற்றி ஆசிரியர்களிடம் சொன்னாய் என மிரட்டியதோடு பள்ளி முடிந்த பின்பும் தாக்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டிற்குச் சென்ற அவர்கள் சின்ன துரையை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அதை தடுக்க முயன்ற சின்னத்துரையின் தங்கைக்கும் அரிவாள் விட்டு விழுந்தது. இந்த சம்பவத்தை கேட்டு சின்ன துரையின் தாத்தா கிருஷ்ணனும் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வேங்கைவயல் சம்பவத்தை பொதுவெளியில் கொண்டு வந்தவர்களுக்கும் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வழங்கினார். புத்தகத்தை வழங்கியபோது விஜயுடன் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கண்ணீருடன் பேசினர்.












Click it and Unblock the Notifications