வங்கதேச விடுதலை போர் வெற்றியின் 50ம் ஆண்டு விழா-போர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
சென்னை: வங்கதேச விடுதலைப் போர் வெற்றியின் 50-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை போர் நினைவுச் சின்னத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
நாடு விடுதலை அடைந்த போது பாகிஸ்தானின் கிழக்கு பகுதி, கிழக்குப் பாகிஸ்தானாக இருந்து வந்தது. கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மத அடிப்படையில் இஸ்லாமியர்களாக இருந்த போதும் மொழி, தேசிய இனம் அடிப்படையில் பாகிஸ்தானால் ஒடுக்குமுறைக்குள்ளாகினர்.
இதனால் கிழக்கு பாகிஸ்தானில் தனிநாடு விடுதலை கோரும் முழக்கமும் இயக்கமும் தீவிரமடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா இந்த பிரச்சனையில் தலையிட்டது. இதனால் 1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே யுத்தம் நிகழ்ந்தது.
2 விஷயங்கள்.. ஸ்டாலின் எடுத்த புது ரூட்.. சிக்கும் மெகா புள்ளிகள்.. அனலடிக்கும் அறிவாலயம்..!
பாக். ராணுவம் சரண்
இந்த யுத்தத்தின் இறுதியில் பாகிஸ்தான் ராணுவம் தோல்வியைத் தழுவி சரணடைந்தது. பாகிஸ்தானின் 90,000 வீரர்கள், இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். இதன் முடிவில் வங்கதேசம் எனும் புதிய நாடு உருவானது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை, காளியின் வடிவமாக பார்ப்பதாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த வாஜ்பாய் புகழாரம் சூட்டினார்.
டிச.16 விஜய் திவாஸ்
1971-ம் ஆண்டு நிகழ்ந்த வங்கதேச விடுதலைப் போரின் வெற்றி விழா ஆண்டு தோறும் டிசம்பர் 16-ந் தேதி விஜய் திவாஸ் நிகழ்ச்சியாக - வெற்றி விழா நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வங்கதேச விடுதலைப் போர் வெற்றியின் 50வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் விஜய் திவாஸ் நாளை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
டாக்காவில் ஜனாதிபதி
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் பயணமாக சென்றுள்ளார். நேற்றும் இன்றும் வங்கதேச விடுதலைப் பொன்விழா நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். இன்று டாக்காவில் வங்கதேசத்தின் முப்படைகள் அணிவகுப்பு மரியாதையையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்
மு.க.ஸ்டாலின் மரியாதை
இதனிடையே சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்ன நிகழ்ச்சியில் இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்த வருகைப் பதிவேட்டில், வங்கதேசப் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள் என முதல்வர் ஸ்டாலின் தமது கருத்துகளைப் பதிவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள், ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் சிறப்பிக்கப்பட்டனர்.
முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், " ஆதிக்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களுக்கு இந்திய இராணுவம் துணை நின்று, வங்கதேச விடுதலையைப் பெற்றுத் தந்த பொன்விழா நாளில், 1971 ஆம் ஆண்டு போரில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.