அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் நான்காவது அணியாக தனித்துப் போட்டியிடுகிறது. இந்த நிலையில் புதிய வாக்காளர்கள், இளம் தலைமுறை தங்களை அடையாளமாக கொள்ள தொடங்கிவிட்டனர் எனவும் மாற்றத்துக்கான புள்ளியாக விஜய் இருப்பதாக கூறி இருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," தமிழக அரசியலில் அரை நூற்றாண்டுகளாக நிலவி வரும் இருமுனைப் போட்டி, இப்போது ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் மையப்புள்ளியாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது.
"தேவை மாற்றம்" என்பது வெறும் முழக்கம் அல்ல; அது இன்றைய மக்களின் அடிமனது தாகம். ஆளுங்கட்சியின் மீதான இயல்பான அதிருப்தி ஒருபுறம் இருந்தாலும், நீண்டகாலமாக மாற்றி மாற்றி வாக்களித்து வந்த சில மக்களுக்கு ஒரு புதிய மாற்று தேவைப்படுகிறது. அந்த இடத்தைத் தான் விஜய் இப்போது நிரப்ப முயற்சிக்கிறார்.

விஜய்
புதிய வாக்காளர்களும், இளம் தலைமுறையினரும் தங்களின் அடையாளமாக விஜய்யைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். அவர்களை விட முக்கியமாக, இந்த அரசியலின் அடிநாதமாக விளங்கும் ஆட்டோ ஓட்டுநர்களில் பலர், இன்று விஜய்யின் 'பிரச்சார பீரங்கிகளாகவே' மாறியிருக்கிறார்கள் என்பது நான் களத்தில் பார்த்த நிதர்சனமான உண்மை.
அதிமுக
இப்படி பல ஆட்டோக்கள் ஒரு நடமாடும் தேர்தல் அலுவலகமாக மாறி, மாற்றத்திற்கான விதையை மக்களிடம் விதைத்து வருகிறது. திராவிடத்திற்கு உயிர் அளித்த பெண்களும் திசை மாறத் தொடங்கியிருக்கிறார்கள். விஜய்யின் வருகை திராவிடக் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரு சவால்தான். இருப்பினும், ஒரு முக்கியமான உண்மையை நாம் கவனிக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் அத்தனை 'மாற்றுச் சக்திகளும்', புதிய கட்சிகளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடத்தைப் பிடிக்கவே ஆசைப்படுகின்றன. டிவிகே-வும் அந்த இலக்கையே குறிவைக்கிறது.
எம்.ஜி.ஆர்
இன்று அரசியலில் நுழையும் ஒவ்வொருவரும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைத் தங்களின் முன்மாதிரியாகக் கொண்டாடுகிறார்கள். அதிமுகவின் ஆணிவேராக இருக்கும் அந்த 'ஏழைப் பங்காளன்' பிம்பத்தை நோக்கி ஆளாளுக்குக் காய் நகர்த்துகிறார்கள். இதனால், அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியைப் பிரிப்பதற்கு இன்று ஒரு பெரிய போட்டியே நடக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம்
கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் பிரிவு, கட்சியினர் கட்சி மாறுதல் எனப் பல காரணங்களால் அதிமுகவின் வாக்குகள் ஏற்கனவே ஆங்காங்கே சிதறத் தொடங்கியுள்ளன. இப்போது விஜய்யும் அதே திசையில் நகர்வது, அதிமுகவிற்குத்தான் மிகப்பெரிய சவாலாக அமையப்போகிறது. "விஜய் நம் வாக்குகளைப் பிரிக்கமாட்டார்" என்று மெத்தனமாக இருப்பது தற்கொலைக்குச் சமம். தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவின் வாக்குகளைத் தான் பெருமளவு பிரிக்கப்போகிறது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப செயல்களை திட்டமிட வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி
இப்போது மெத்தனமாக இருந்துவிட்டு, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வருத்தப்படுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதிமுக தனது வாக்கு வங்கியைத் தக்கவைக்க வேண்டுமானால், ஒவ்வொரு தொண்டனும், நிர்வாகியும் "உயிர் கொடுத்து" வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மாற்றம் எனும் புயல் வீசத் தொடங்கிவிட்டது. அந்தப் புயலில் தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அதிமுகவிற்கு இருக்கிறது. காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications