அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்... வாழ்த்தும் நோயாளிகள்
கொரோனா நோயாளிகளுக்காக அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.
கடலூர்: விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், மாஸ்குகள், கையுறைகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் நோயாளிகளுக்கு படுக்கை வசதியும் ஆக்சிஜனும் கிடைப்பதில்லை. நோயாளிகளுக்காக தங்களால் இயன்ற உதவி செய்த விஜய் ரசிகர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். தேவைப்படும் காலத்தில் செய்யும் உதவி சிறிதளவாக இருந்தாலும் அது இந்த உலகத்தை விட மிகப்பெரியது.
நாடு முழுவதும் கொரோனாவிற்கு தினசரியும் 4 லட்சம் பேர் பாதித்து வருகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். குவியல் குவியலாக சடலங்கள் எரிக்கப்பட்டும் புதைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தினசரியும் 18 ஆயிரம் பேர் வரை கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
நாட்டில் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை... மத்திய அரசு பதில்.. டெல்லி அரசை கண்டித்த உச்ச நீதிமன்றம்
நோயாளிகளுக்கு ஆக்சிஜன்
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். உலக நாடுகள் பலவும் இந்தியாவிற்கு தேவையான உதவிகளைச் செய்து வருகின்றன.
அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள்
நடிகர் விஜய் சொன்னதன் பேரில் விருத்தாசலம் விஜய் மக்கள் இயக்கத்தினர் காலத்திற்கு ஏற்ற நல்ல உதவி ஒன்றினை செய்துள்ளனர். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் தேவைக்கு பத்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளனர்.
மருத்துவர்களுக்கு முக கவசங்கள்
மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், கையுறைகள் விஜய் மக்கள் இயக்கத்தினரால் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் சீனு மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர், மாவட்ட மாணவரணி தலைவர் அப்பாஸ் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
காலத்தினால் செய்த உதவி
உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று பலரும் கூறி வரும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்களால் முடிந்த உதவியை செய்துவிட்டனர். அவர்கள் உதவி செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த காரியத்தை பார்த்த பிற நடிகர்களின் ரசிகர்கள் அவர்களை வாழ்த்தியுள்ளனர்.